யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்த இரா சிங்காலுக்கு அரசு வேலை தருமா?.. பெரும் கவலையில் பெற்றோர்
டெல்லி: யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்துள்ள இரா சிங்காலுக்கு மத்திய அரசு பணி தருமா என்ற கவலையில் அவரது பெற்றோர்கள் உள்ளனர். இரா சிங்கால் மாற்றுத் திறனாளி என்பதால்தான் இந்தக் கவலை.
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் இரா சிங்கால் தேசிய அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். மேலும் முதல் நான்கு இடத்தையும் பெண்களே பிடித்துள்ளனர். நாடு முழுவதும் இந்த தேர்வு முடிவுகள் பரபரப்பாக அலசப்பட்டு வருகின்றன.
ஆனால் இரா சிங்காலின் வீடு மகா அமைதியாக காணப்படுகிறது. கொண்டாட்டமோ, உற்சாகமோ இல்லை. காரணம், இரா சிங்காலுக்கு மத்திய அரசு பணியிடம் ஒதுக்குமா என்ற கவலையில் அவரது பெற்றோர் உள்ளனர்.
மாற்றுத் திறனாளி
இரா சிங்கால் மாற்றுத் திறனாளி ஆவார். முன்பு அவர் ஐஆர்எஸ் தேர்வில் (Indian Revenue services) வெற்றி பெற்றபோது அரசு அவருக்கு வேலை தரவில்லை. எனவே இந்த முறையும் அதேபோல நடக்குமா என்ற கவலையில் இராவின் பெற்றோர்கள் உள்ளனர்.
என்ஜீனியர்
இரா சிங்கால், டெல்லி நேதாஜி சுபாஷ் தொழில்நுட்பக் கழகத்தில் பட்டம் பெற்ற என்ஜீனியர் ஆவார். மேலும் எம்.பிஏவும் படித்துள்ளார். பொதுப் பிரிவின் கீழ் யுபிஎஸ்சி தேர்வை எழுதியிருந்தார் இரா சிங்கால்.
மகிழ்ச்சிதான்.. ஆனால்
இதுகுறித்து இராவின் தந்தை ராஜேந்தர் சிங்கால் கூறுகையில், இரா வெற்றி பெற்று முதலிடம் பிடித்திருப்பது எங்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ஆனால் அவருக்கு போஸ்ட்டிங் கிடைக்குமா என்று தெரியவில்லை. அது கவலை தருகிறது.
வேலை தரத் தயங்கிய அரசு
எனது மகள் 2010ம் ஆண்டு ஐஆர்எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். முதலில் அவருக்கு வேலை தர வருவாய்த்துறை தயாராக இருந்தது. ஆனால் பெர்சனல் மற்றும் பயிற்சித் துறை அதற்கு அனுமதி மறுத்து விட்டது. இதை எதிர்த்து நீண்ட சட்டப் போராட்டத்தில் நாங்கள் ஈடுபட வேண்டியதாயிற்று. 2014ல்தான் இந்த வழக்கில் இரா வென்றார்.
விடா முயற்சி கொண்ட இரா
எப்போதுமே தனது குறை தன்னை முடக்கி விட அனுமதித்ததே இல்லை இரா. விடா முயற்சி அதிகம் கொண்டவர். இன்னும் சொல்லப் போனால் எல்லோரையும் போலவே அவரும் சாதாராண, நார்மல் ஆன பெண்தான். மற்றவர்களுக்கு உதவுவதில் அவருக்கு நிகர் அவரே என்றார் இராவின் தாயார் அனிதா சிங்கால்.
நான் கலெக்டராக வேண்டும்
இரா தனது தேர்வு குறித்துக் கூறுகையில், நான் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.
உதவ வேண்டும்
மற்றவர்களைப் போலவே என்னாலும் செயல்பட முடியும். மாற்றுத் திறனாளிகளை இந்த சமுதாயம் மாறுபட்ட பார்வையில் பார்க்கிறது. அது மாற வேண்டும். அவர்களுக்கு நிறைய செய்ய வேண்டியுள்ளது என்றார் அவர்.