ரியோ ஒலிம்பிக்கில் சாதித்தவர்களுக்கு மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயிலில் இலவச பயணம்
டெல்லி: ரியோ ஒலிம்பிக்கில் சாதனை படைத்த பி.வி.சிந்து, சாக்ஷி மாலிக் மற்றும் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பதக்கம் வரை சென்ற தீபா கர்மாகர் ஆகிய மூன்று வீராங்கனைகளையும் மகாராஜா எக்ஸ்பிரஸ் சொகுசு ரயிலில் இலவச சுற்றுப் பயணம் மேற்கொள்ள இந்தியன் ரயில்வே அழைப்பு விடுத்துள்ளது.
ஐஆர்சிடிசி எனப்படும் இந்திய ரயில்வே சுற்றுலா நிறுவனம் நாடு முழுவதும் ரயில்வே சேவை வழங்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது. இது மட்டுமின்றி, ரயில் சுற்றுலா பயணங்களுக்காக, சிறப்பு ரயில்களையும் இயக்கி வருகிறது.
மகாராஜா எக்ஸ்பிரஸ் என்ற பெயரில், மும்பை தொடங்கி, டெல்லி வரையான 5 நட்சத்திர ஓட்டலுக்கு இணையான வசதிகள் கொண்ட ஆடம்பர சுற்றுலா ரயிலை ஐஆர்சிடிசி இயக்கிவருகிறது.
இந்த ரயிலில், 5 நட்சத்திர ஓட்டலில் உள்ள அனைத்துவிதமான வசதிகளும் உள்ளன. மேலும் ரயில் பயணிகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பும் அளிக்கப்படும்.
மும்பையில் இருந்து டெல்லி வரையுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள், வரலாற்று நினைவிடங்கள் போன்றவற்றை 8 நாட்களில் சுற்றி பார்க்கும் விதமாக, இந்த மகாராஜா ரயில் சேவை மேற்கொள்ளப்படுகிறது.
இதில் ரயில் கட்டணம் ஒரு லட்சத்தில் தொடங்கி, ரூ.20 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மகாராஜா ரயிலில், ரியோ ஒலிம்பிக் சாதனையாளர்களான பி.வி.சிந்து, சாக்ஷி மாலிக் மற்றும் தீபா கர்மாகர் ஆகியோர் இலவசமாகப் பயணம் மேற்கொள்ள, ஐஆர்சிடிசி அழைப்பு விடுத்துள்ளது.
உலக அரங்கில் இந்தியாவை பெருமையடையச் செய்த, இந்த வீராங்கனைகளுக்கு, இலவசமாக ரயில் சேவை வழங்குவது தனது கடமை என்றும், ஐஆர்சிடிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.