''ஜனவரி 26ம் தேதி குண்டு வைக்க ஓ.கே.வா?'': ஐஎஸ்ஐஎஸ் மிரட்டல் கடிதங்கள் மும்பையில் கண்டெடுப்பு!
மும்பை: குடியரசு தினத்தன்று இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக கூறும் இரு மிரட்டல் கடிதங்கள் மும்பை ஏர்போர்ட் கழிவறைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மும்பையிலுள்ள, உள்நாட்டு விமான நிலையத்தின் ஏ1 முனையத்தின் வெளிப்புறம் அமைந்துள்ள, கழிவறைக்குள், "Is 26/01/2015 BOM OK?" என்று எழுதப்பட்ட ஒரு கடிதம் நேற்று மாலை கிடந்துள்ளது. கழிவறையை சுத்தம் செய்யும் தொழிலாளி இதை கண்டெடுத்துள்ளார். சில நிமிடங்களிலேயே அதேபோன்ற மற்றொரு கடிதம் பக்கத்திலுள்ள மற்றொரு கழிவறைக்குள்ளும் கண்டெடுக்கப்பட்டது.
இவ்விரு கடிதங்களுமே, ஆண்கள் கழிவறைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து விமான நிலையத்தில் தொழிற்சாலை பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குடியரசு தினத்தின்போது அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். அதே நேரம் அவர் பாதுகாப்பு காரணங்களுக்காக, பாகிஸ்தான் செல்லப்போவதில்லை.
Another ISIS threat scribbled at Mumbai airport loo http://t.co/q3FeMl48UZ pic.twitter.com/loCi7SDTqG
— NDTV (@ndtv) January 16, 2015
எனவே இந்தியாவையும், அச்சுறுத்தல்மிக்க நாடாக மாற்றுவதற்கு தீவிரவாத அமைப்புகள், முயற்சி செய்துவருகின்றன. அதன் ஒருபகுதியாக குடியரசு தினத்தின்போது பல தாக்குதல்களை நடத்த அவை திட்டமிட்டுள்ளன. இருப்பினும் இந்திய உளவு அமைப்பு, தீவிரவாதிகளின் திட்டங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
கடந்தவாரம் மும்பை விமான நிலைய கழிவறை சுவரில், இதேபோன்ற மிரட்டல்வாசகங்கள் ஐஎஸ்ஐஎஸ் பெயரில் எழுதப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை எழுதிய குற்றவாளி இன்னும் பிடிபடாத நிலையில், மீண்டும் அதேபோன்ற மிரட்டல் கடிதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது மும்பைவாசிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேருவதற்காக மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் நகரிலிருந்து நான்கு இளைஞர்கள் ஈராக் சென்ற நிலையில், தீவிரவாத எண்ணம், அம்மாநில இளைஞர்கள் மத்தியில் இணையதளம் மூலம் பரப்பப்பட்டுவருவருவது உறுதியாகியுள்ளது. எனவே தீவிரவாத எண்ணம் கொண்ட நபர்கள்தான் மும்பை விமான நிலையத்தில் இதுபோன்று மிரட்டல் விடுத்துவருவதாக நம்பப்படுகிறது. விமான நிலையத்தின் கழிவறைக்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான உருவங்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.