26/11 மும்பை தாக்குதலின் பெயரில் 'அரசியல் ஆதாய" வியூகமா? சர்ச்சையில் ஆம் ஆத்மி
டெல்லி: உலகை உலுக்கிய மும்பை தாக்குதலின் பெயரில் ஆம் ஆத்மி கட்சி அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக புதிய சர்ச்சை அரசியல் வட்டாரங்களை அதிர வைத்துள்ளது.
2008 ஆம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி உலகம் உறைந்து போன மும்பை கொடூர தாக்குதலை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நிகழ்த்தினர். இன்றளவும் இந்த காயம் ஆறாத ரணமாக இந்தியர்களின் மனதில் இருக்கிறது.
நூற்றுக்கணக்கான உயிர்களை ஈவிரக்கமின்றி பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் பலியெடுத்த நாளை இந்தியாவின் ஒரு அரசியல் கட்சி ' அரசியல் ஆதாயத்துக்கா'க பயன்படுத்திக் கொண்டிருப்பதாக திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரூ2611 கோடி நிதி உதவி
ஊழல் ஒழிப்பையும் மாற்றத்தை முன்வைக்கும் கட்சி ஆம் ஆத்மி. இக்கட்சியானது டெல்லி சட்டசபை தேர்தலுக்காக ரூ2611 கோடி தேர்தல் நிதி வழங்குமாறு தமது ஆதரவாளர்களிடம் ட்விட்டர் சமூக வலைதளத்தில் வேண்டுகோள் விடுத்தது. ஒரு கட்சி தேர்தல் நிதி கோருவது தவறா என்ற கேள்விக்கு நிச்சயம் இல்லை என்ற பதில்தான்.
அரசியல் ஆதாயம்?
ஆனால் ஆம் ஆத்மி கோரியிருக்கும் தொகை ரூ2611. நாடே 26/11 தாக்குதலில் உறைந்து கிடக்கும் நாளில் அதைக் குறிக்கும் வகையில் ரூ2611 கோடி நிதி கோருகிறது ஆம் ஆத்மி அரசியல் கட்சி. அப்படியானால் மும்பை தாக்குதல் சம்பவத்தை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துகிறதா ஆம் ஆத்மி?
நிறுவன நாளாம்...
இது குறித்து ஆம் ஆத்மியின் தேசிய செய்தித் தொடர்பாளர் தீபக் பாஜ்பேய் கூறுகிறார், 26/11 என்பது ஆம் ஆத்மி உருவான நாள். அதனால்தான் 26/11 எங்கள் கட்சியின் நிறுவன நாளாக 'கொண்டாடுகிறோம்'.. அதனாலேயே ரூ2611 கோடி நிதி உதவி வழங்கவும் கோரியுள்ளோம் என்கிறார்.
வெட்கக் கேடாது..
ஆம் ஆத்மியின் இந்த சப்பைக் காரணத்தை பாஜக நிராகரித்துள்ளது. மும்பை தாக்குதலைக் குறிக்கும் 26/11 என்பதை அரசியல் ஆதாயத்துக்காக ஆம் ஆத்மி பயன்படுத்துவது வெட்கக் கேடானது என்கிறார் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா.
கிரண்பேடி மறுப்பு
ஆம் ஆத்மி குறித்து முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க மறுத்திருக்கிறார்.
கடந்த ஆண்டு மவுனம் ஏன்?
அதே நேரத்தில் கடந்த ஆண்டு 26/11 நாளில், தமது கட்சியின் நிறுவன நாள் என்றெல்லாம் ஆம் ஆத்மி ட்விட்டர் தளத்தில் எதுவும் குறிப்பிடவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. டெல்லி சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டதாலேயே அரசியல் ஆதாயத்துக்காகவே மும்பை தாக்குதல் நாளை 26/11 என்ற பெயரில் ஆம் ஆத்மி பயன்படுத்துகிறது என்றே அரசியல் ஆர்வலர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.