இந்தியாவை தனிமைப்படுத்த பாக் - ஆப்கான் ஒப்பந்தம்?
டெல்லி: இந்தியாவை தனிமைப்படுத்தும் வகையில் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி இருப்பது நாட்டின் உளவுத்துறை வட்டாரங்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மற்றும் ஆப்கானிஸ்தானின் உளவு அமைப்பு ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தம் இந்தியாவை கவலை அடைய வைத்துள்ளது. இந்த இரு நாடுகளும் உறவுகளை வலுவாக்கிக் கொள்ள இந்த ஒப்பந்தத்தை உருவாக்கி இருப்பதாக கூறுகின்றன.
அதே நேரத்தில் இந்த ஒப்பந்தத்தின் ஷரத்து ஒன்றில், இருநாட்டு உளவு அமைப்புகளும் எதிரி நாடுகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஷரத்துதான் இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நட்பு நாடு..
இந்தியாவைப் பொறுத்தவரையில் ஆப்கானிஸ்தானுடன் நல்லுறவை வளர்த்து உளவுத்துறை தகவல்களை பரிமாறி வருகிறது. ஆப்கானிஸ்தானிலும் பொதுவாக பாகிஸ்தானையே எதிரி நாடாகத்தான் கருதப்பட்டு வருகிறது.
பொய் பரப்பும் ஐ.எஸ்.ஐ.
ஆனால் ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக அஷ்ரப் கனி பொறுப்பேற்ற பின்னர் அவர் பாகிஸ்தானுடனான உறவுகளை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டினார். தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் நடத்தி வரும் தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் என்ற பொய்யான தகவலை பாகிஸ்தான் உளவு அமைப்பபான ஐ.எஸ்.ஐ. பரப்பி வருகிறது. இதனையே ஆப்கானிஸ்தான் உளவுத்துறைக்கும் ஐ.எஸ்.ஐ. தெரிவித்து வருகிறது.
தகவல் பரிமாற்றத்தில் சிக்கல்
உண்மையில் ஐ.எஸ்.ஐ. உதவியுடன்தான் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனை மறுத்து இந்தியாவையும் ஆப்கானிஸ்தானையும் எதிரிநாடாக்கிவிடும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது. இதன் ஒருபகுதியாகத்தான் இந்த ஒப்பந்தத்தை இந்திய உளவு அமைப்பு கருதுகிறது. இந்த ஒப்பந்தத்தை ஆப்கானிஸ்தான் பின்பற்றினால் அந்நாட்டிடம் இருந்து தீவிரவாதிகள் குறித்த உளவுத்துறை தகவல்கள் கிடைக்காமல் போவது இந்தியாவுக்கு பாதிப்பாக அமைந்துவிடும்.
இங்கிலாந்துக்கு என்ன வேலை?
இதனிடையே பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான ஒப்பந்தத்தை உருவாக்கியதில் இங்கிலாந்தின் பங்களிப்பு இருப்பதாகவும் இந்தியா கருதுகிறது. இத்தகைய ஒப்பந்தத்தை உருவாக்கிக் கொடுப்பதன் மூலம் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தானில் எதை சாதிக்க விரும்புகிறது என்பது குறித்தும் இந்தியா ஆராய்ந்து வருகிறது