ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு இந்தியாவில் ஆதரவு: ராஜ்நாத்சிங் கவலை
குவஹாத்தி: இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தில் இன்று நடைபெற்ற காவல்துறை மாநாட்டில் ராஜ்நாத்சிங் பேசியதாவது:
தீவிரவாதிகள் இந்தியாவை சீர்குலைக்க சதி செய்கின்றனர். இந்த சதித் திட்டத்தை செயல்படுத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. போன்ற அரசு அமைப்புகள் உறுதுணையாக இருக்கின்றன.
தீவிரவாதிகள் முன்னர் ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களை தங்கள் படைகளில் மிக எளிதாக இணைத்து வந்தனர். ஆனால், அது இப்போது சாத்தியில்லாமல் போனது.
தீவிரவாதிகளை ஆதரிக்கவில்லை என பாகிஸ்தான் அரசு கூறுகிறது. ஆனால், அது உண்மை அல்ல. ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கிறது.
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தாக்கம் அண்மைக்காலமாக இந்தியாவில் அதிகரித்து வருவது கவலைக்குரியது. உலகில் எத்தனை எத்தனையோ பயங்கரவாத அமைப்புகள் இயங்கலாம். ஆனால், அவை இந்தியாவில் கால் பதிக்க அரசு நிச்சயம் அனுமதிக்காது.
இந்திய மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதில் போலீஸ், உளவுத் துறை அமைப்புகளின் பங்கு முக்கியமானது.
இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.