லேன்டர், ரோவர் வசதிகளுடன்... 2017ம் ஆண்டு நிலவுக்குப் போகிறது சந்திராயன்- 2
டெல்லி: சந்திரனைக் குறித்து ஆய்வு செய்வதற்காக சந்திராயன் - 2 வரும் 2017ம் ஆண்டு விண்ணில் ஏவப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மங்கள்யான் வெற்றியைத் தொடர்ந்து சந்திரனைக் குறித்து ஆராய சந்திராயன்-2 விண்கலத்தை விண்ணில் ஏவ இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி சந்திராயன்-2 விண்கலம் நிலவில் ரோபாட் கார் போல தரையிறங்கி ஆய்வு நடத்தும். இந்த விண்கலம் விண்வெளி ஆய்வில் முக்கிய மைல் கல்லாக இருக்கும்.
இந்நிலையில், இதுகுறித்து ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தர் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங். அதில் அவர், ‘இந்தியாவில் இருந்து சந்திரனை ஆராய அனுப்பப்படும் இரண்டாவது பெரிய விண்கலம் சந்திராயன் - 2.
இதில், சந்திரனில் இறங்கி, நகர்ந்து, ஆராய்ச்சி செய்வதற்குரிய ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் வசதிகள் இடம் பெறும். இது வரும் 2017 -18 ஆண்டுகளில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு நிலையத்திலிருந்து ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும்' என தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-1 என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் கடந்த 2008ம் ஆண்டு, அக்டோபர் 22 ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட ஆளில்லாத விண்கலம் ஆகும். இதன் முக்கிய நோக்கம், சந்திரனின் மேற்பரப்பில் உள்ள தாதுக்கள் மற்றும் வேதி மூலகங்களைக் குறித்து ஆய்வு செய்வது மற்றும் சந்திரன் பரப்பை அதிக துல்லியத்துடன் முப்பரிமாண வரைபடமாக்கலும் ஆகும்.
சந்திராயன் - 2 ஆனது சந்திராயன் -1 ஐக் காட்டிலும் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.