ரூ.5 லட்சம் டெபாசிட் செய்த சீனியர் சிட்டிசன்கள் அச்சப்பட வேண்டாம்.. ஐடி அபயம்
வங்கிகளில் மூத்த குடிமக்கள் ரூ.5 லட்சம் வரையில் டெபாசிட் செய்திருந்தால், விசாரணை கிடையாது என வருமான வரித்துறை சலுகையை அறிவித்துள்ளது.
டெல்லி: 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வங்கிகளில் ரூ.5 லட்சம் வரையில் டெபாசிட் செய்திருந்தால், விசாரணை இல்லை என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
உயர மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது. மேலும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சலகங்களிலும், ரிசர்வ் வங்கி அலுவலகங்களிலும் ஒப்படைத்துவிட்டு புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து பலர் லட்சக்கணக்கில் டெபாசிட் செய்ததை கண்ட வருமான வரித்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இரண்டரை லட்சத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்தவர்களை கண்காணித்த வருமான வரித்துறை அவர்களை தனது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது.
அதே நேரத்தில் 70 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள் ரூ.5 லட்சம் வரை டெபாசிட் செய்திருந்தால், தொடர் சரிபார்ப்பு நடவடிக்கைகள், விசாரணைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவித்துள்ளது.
இதுபற்றி மத்திய நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து, அவற்றை டெபாசிட் செய்ய வழங்கப்பட்ட அவகாச காலத்தில் பழைய ரூ.1000, ரூ.500 நோட்டுகளை டெபாசிட் செய்த ஒவ்வொருவரையும் நாங்கள் விசாரணை செய்யப்போவதில்லை. ஆகையால் யாரும் பீதி அடைய வேண்டாம்.
அந்த வகையில், உச்சவரம்பு நிர்ணயித்து அது தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கு வருமான வரித்துறையினருக்கு தெளிவான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. இது சரிபார்க்கத்தானே தவிர, ஆய்வு செய்வதற்கோ அல்லது அளவீடு செய்வதற்கோ அல்ல.
70 வயதுக்கு உட்பட்ட குடிமக்கள் ரூ.2½ லட்சத்துக்கு அதிகமாக வங்கிகளில் டெபாசிட் செய்திருந்தால், அவர்கள் வருமான வரித்துறை இணையதளத்துக்கு போய் டெபாசிட் குறித்த விளக்கத்தை அளிக்க வேண்டும். இந்த டெபாசிட்டுகள் முந்தைய வருமான வரி கணக்குடன் ஒத்துபோகிறபோது, இந்த விவகாரம் முடித்துக்கொள்ளப்படும்.
அதே நேரத்தில் டெபாசிட்தாரர் சரி பார்க்காவிட்டால் அல்லது வருமானத்துக்கும் டெபாசிட்டுக்கும் ஒத்துபோகாவிட்டால், அவர்களிடம் கூடுதல் விளக்கம் கேட்கப்படும்.
அதே நேரத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு (வரி செலுத்துபவர்கள்) இந்த உச்ச வரம்பு ரூ.5 லட்சம் ஆகும். அவர்களது டெபாசிட்டுகளுக்கான ஆதாரம், சிறுசேமிப்பு, கடந்த கால வருவாய் சேமிப்பாக இருக்க வேண்டும். வேறு ஏதாவது தொழில் செய்து வருமானம் வராமல் இருக்கவேண்டும்.
இந்த டெபாசிட் பிரச்சினையில் பொதுவாக யாருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பாமல், விளக்கம் கேட்கப்படும் என்றார் அவர்.