காலையில் பெய்த கன மழை எஃபெக்ட்: டிராபிக் நெரிசலில் விழிபிதுங்கிய பெங்களூரு!
பெங்களூரு: பெங்களூருவில் இன்று காலை திடீரென மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையால் நகரின் பல பகுதிகளில் கடுமையான டிராபிக் நெரிசல் ஏற்பட்டு மக்கள் விழி பிதுங்கினர்.
பூங்கா நகரமான பெங்களூரில் சில ஆண்டுகள் முன்புவரை, அவ்வப்போது மழை பெய்து கொண்டிருக்கும். ஆனால் தற்போது திரும்பும் பக்கம் எல்லாம் கட்டிடங்களை தான் காண முடிகிறது. இருக்கும் மரங்களை எல்லாம் வெட்டிவிட்டு அந்த இடத்தில் கட்டிடங்கள் கட்டி வருவதால் தற்போது பெங்களூரில் மழை அவ்வப்போது பெய்வது இல்லை.
காலையில் தூரல்
இந்நிலையில் இன்று காலை 7.30 மணிக்கு லேசான தூரலுடன் மழை தொடங்கியது. அந்த அழகை மக்கள் ரசித்துக் கொண்டிருந்த நிலையில், மழை சக்கை போடு போடத் துவங்கியது. காலை நேரத்தில் மழை கொட்டு கொட்டு என்று கொட்டியது அழகாக உள்ளது என்று சிலர் தெரிவித்தனர். அதே சமயம் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு செல்வோரோ அய்யோ இந்த மழை இப்பொழுது தான் பெய்ய வேண்டுமா என்று நொந்து கொண்டிருக்கின்றனர்.
மழையால் டிராபிக்
வழக்கமாகவே, பீக்-ஹவர்களில், பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும். நிலைமை இப்படி இருக்கும்போது, காலையிலேயே மழை பெய்ததால், அலுவலகம், பள்ளி, கல்லூரி செல்வோர்களின் வாகனங்கள் கடுமையான நெரிசலுக்கு உள்ளாகின.
எந்தெந்த பகுதிகள்..
குறிப்பாக, மெஜஸ்டிக், மல்லேஸ்வரம், யஷ்வந்த்பூர், மத்திகெரே, மடிவாளா, பொம்மனஹள்ளி, வில்சன்கார்டன், நாகரபாவி, ஞானபாரதி, மாகடி ரோடு, கெங்கேரி, பனசங்கரி, ஜெயநகர் உள்ளிட்ட பகுதிகளில் டிராபிக் நெரிசல் கடுமையாக இருந்தது.
மழையில் நனைந்த அலுவலகவாசிகள்
அலுவலகங்கள் செல்வோர் 1 மணி நேரத்துக்கும் மேலாக டிராபிக் நெரிசலில் சிக்கி, மழையிலும் நனைந்தபடி சென்று சேர்ந்தனர். இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.
மழை தொடரும்
மழை இன்னும் 3 நாட்களுக்கு தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.