நவ.8-ம் தேதிக்கு பிறகு நடந்த ஐ.டி.ரெய்டில் ரூ.130 கோடி கருப்பு பணம் பறிமுதல்
வருவான வரித்துறை சோதனையில் ரூ130 கோடி அளவுக்கு கருப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: நவம்பர் 8ம் தேதிக்கு பிறகு நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை ரூ.130 கோடி மதிப்பிலான பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் ஆணையம் நேற்று தகவல் வெளியிட்டுள்ளது.
கருப்புப் பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டன. கருப்பு பணம் பதுக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறை நாடு முழுவதும் அதிரடி சோதனைகளை மேற்கொண்டது. இதில் பல்வேறு இடங்களில் கருப்பு பணம் பதுக்கியவர்கள் சிக்கினர்.
பெங்களூரில் நடந்த சோதனையில் மட்டும் 4 கோடி புதிய ரூ.2000 நோட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பெங்களூரு வருமான வரித்துறை பிரிவினர், மொத்தம் 18 வழக்குகளை அமலாக்கத்துறை விசாரணைக்கு பரிந்துரைத்தனர். இதனிடையே நவம்பர் 8ம் தேதிக்கு பிறகு நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை ரூ.130 கோடி மதிப்பிலான பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் ஆணையம் நேற்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 8 ம் தேதிக்கு பிறகு வருமான வரித்துறை மேற்கொண்ட தீவிர சோதனையில், இதுவரை 400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், ரூ.130 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரூ.2000 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. வருமான வரிச்சட்டத்திற்கு அப்பாற்பட்ட வழக்குகள் அமலாக்க துறையும், சிபிஐயும் விசாரிக்க பரிந்துரை செய்யப்படும். முதற்கட்டமாக 30 வழக்குகள் அமலாக்கத் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.