அடுத்தபடியாக.. சி.என்.ஆர்.ராவ் வாயில் விழுந்த 'ஐ.டி' காரர்கள்!
பெங்களூர்: பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட பின்னர் விஞ்ஞானி சிஎன்ஆர் ராவ் புல் பார்முக்குப் போய் விட்டார்.. முதலில் இந்திய அரசியல்வாதிகளை முட்டாள்கள் என்றார். இப்போது சாப்ட்வேர் என்ஜீனியர்கள் முதலான தகவல் தொழில்நுட்ப துறையினரை சந்தோஷமே இல்லாத ஜடங்கள் என்று வர்ணித்துள்ளார்.
பணத்துக்காக மட்டுமே இவர்கள் வேலை பார்ப்பதாகவும், பணம் பணம் என்று அலைவதாகவும் இவர் டைப் அடித்து விட்டுப் போயிருக்கிறார்.
அரசியல்வாதிகளை முட்டாள்கள் என்றும், தகவல் தொழில்நுட்பத்துறையினரை சந்தோஷம் இல்லாத ஜடங்கள் என்று கூறியிருக்கும் ராவ், அடுத்து யாரை வைத்து பஞ்சாயத்தைக் கூட்டப் போகிறார் என்று தெரியவில்லை.
வாங்க ராவ் பாடிய வசை புராணத்தைப் பார்த்து விட்டு வருவோம்....
அறிவியலுக்கும் இவங்களுக்கும் என்னய்யா சம்பந்தம்
அறிவியலும், தகவல் தொழில்நுட்பத்துறைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.
பணம் சம்பாதிக்க மட்டுமே
ஐடி என்பது பணம் சம்பாதிக்க மட்டுமே பயன்படுகிது. இந்த வேலையில் இருப்பவர்கள் எல்லோருமே சந்தோஷமே இல்லாத ஜடங்கள்தான்.
டெய்லி ஒருத்தன் தற்கொலை செய்கிறான்
நான் டெய்லி பேப்பர் படிக்கிறேன். அதில் தினசரி ஒரு சாப்ட்வேர் என்ஜீனியரின் தற்கொலைச் செய்தியை தவறாமல் படிக்கிறேன். இல்லாவிட்டால் விவாகரத்து செய்தி வருகிறது.
யாருமே சந்தோஷமாக இல்லை
தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை பார்ப்போரில் பெரும்பாலானவர்கள் சந்தோஷமாக இல்லை. கொடுமையான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
அவங்களுக்கு இப்படித்தான் நடக்கும்
அவர்களுக்கு இப்படி நடக்கிறது என்றால் அவர்களும் அப்படித்தானே இருக்கிறார்கள். வேலையை அவர்கள் ரசித்துச் செய்வதில்லை.
என்னைப் பாருங்க.. எம்புட்டு சந்தோஷமா கீறேன்...
இப்ப என்னைப் பாருங்க, எவ்வளவு சந்தோஷமா இருக்கிறேன். எனக்கு 80 வயசாச்சு. இன்னும் ஜாலியா, சந்தோஷமா இருக்கேன். நீ்ங்களும் அப்படி இருங்களேன்.
ஒரு பிரச்சினையும் எனக்கு இல்லை
எனக்கு ஒரு குறையும் இல்லை, பிரச்சினையும் இல்லை. மகிழ்ச்சி என்பது வித்தியாசமானது. அதை நீங்கள் செய்யும் வேலையுடன் சேர்த்து அனுபவிக்க வேண்டும்.
கடைசிலதான் விஞ்ஞானிகள் வர்றாங்க...
எங்கு பார்த்தாலும் விளையாட்டு, காவல்துறை, ராணுவம் இப்படித்தான் முக்கியத்துவம் தருகிறார்கள். விஞ்ஞானிகளை கடைசியாகத்தான் வைத்திருக்கிறார்கள்.
யாராச்சும் அதைப் பத்தி ஒரு வார்த்தை பேசினீங்களாய்யா...
எனக்கு கடந்த 2005ம் ஆண்டு 10 லட்சம் டாலர் பரிசுத் தொகையுடன் டான் டேவிட் பரிசை அளித்தார்கள். அது நோபல் பரிசுக்கு இணையானது. ஆனால் யாராவது அதைப் பற்றிப் பேசினார்களா...
மத்தவங்களெல்லாம் தூக்கி வச்சுக் கொண்டாடுவாங்க..
பிற நாடுகளில் இந்த விருதைப் பெறுகிறவர்களை தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள்.. ஆனால் இது இந்தியாவாச்சே.. அதான் யாரும் கண்டுக்கல...என்று பொருமித் தள்ளி விட்டார் ராவ்.