டெல்லி ஔரங்கசீப் சாலையின் பெயரை மாற்ற முதலில் கோரிக்கை விடுத்த பாகிஸ்தானியர்
டெல்லி: டெல்லியில் உள்ள ஔரங்சீப் சாலைக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்தல் கலாமின் பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது ஒரு பாகிஸ்தானியர் என்பது தெரிய வந்துள்ளது.
டெல்லியில் உள்ள ஔரங்கசீப் சாலைக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயரை வைக்கப் போவதாக மாநகராட்சி அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. சாலையின் பெயரை மாற்ற சிலர் எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இது குறித்து ஆர்.எஸ்.எஸ். நாளிதழான ஆர்கனைசரில் கூறியிருப்பதாவது,
கனடாவில் வசிக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் தாரிக் பதேஹ் கடந்த 2013ம் ஆண்டு இந்தியா வந்தபோது முகலாய மன்னர் ஔரங்கசீப் பெயரில் சாலை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் அந்த சாலையின் பெயரை மாற்றுமாறு இந்திய முஸ்லீம்களுக்கு கோரிக்கை விடுத்தார். அந்த சாலைக்கு ஔரங்கசீப்பின் சகோதரர் தாரா ஷிகோவின் பெயரை வைக்க வேண்டும் என்று அவர் கோரினார்.
இந்நிலையில் கலாம் மறைவுக்கு பிறகு ஔரங்கசீப் சாலைக்கு அப்துல் கலாமின் பெயரை வைக்க வேண்டும் என அவர் ட்விட்டர் மூலம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து டெல்லியைச் சேர்ந்த பாஜக எம்.பி. ஒருவர் பிரதமர் மோடியை அணுகி ஔரங்கசீப் சாலைக்கு கலாம் பெயர் வைக்க வேண்டும் என்று கூறினார்.
டெல்லியின் முக்கிய பகுதியில் இருக்கும் ஔரங்கசீப் சாலையில் பல கோடீஸ்வரர்கள் வசித்து வருகிறார்கள். ஔரங்கசீப் 6வது முகலாய மன்னர் ஆவார். 17வது நூற்றாண்டில் அவர் இந்திய துணைகண்டத்தின் பல்வேறு பகுதிகளை ஆட்சி செய்தார். ஔரங்கசீபால் கொலை செய்யப்பட்ட சீக்கிய குரு தேக் பகதூரின் பெயரை ஔரங்கசீப் சாலைக்கு வைக்க வேண்டும் என டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாக குழு கடந்த 2014ம் ஆண்டு கோரிக்கை விடுத்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.