காஷ்மீரில் ஏப்ரல் 9ம் தேதிக்குள் புதிய அரசு அமைக்காவிட்டால் சட்டசபை கலைப்பு?
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் புதிய அரசு அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில் மாநில ஆளுநர் ஏப்ரல் 9-க்குப் பின்னர் சட்டசபையை கலைத்துவிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஏப்ரல் 9-ந் தேதிக்குள் மக்கள் ஜனநாயகக் கட்சி(பிடிபி), பாஜக ஆட்சி அமைப்பது குறித்து முடிவுக்கு வர வேண்டிய நெருக்கடியில் உள்ளன.
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் 2014-ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது. மொத்தமுள்ள 87 இடங்களில் மக்கள் ஜனநாயக கட்சி 27, பாஜக 25, தேசிய மாநாட்டு கட்சி 15, காங்கிரஸ் 12 தொகுதிகளைக் கைப்பற்றின.
பெரும்பான்மையை நிரூபிக்க 45 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. 3 மாத இழுபறிக்குப் பிறகு மக்கள் ஜனநாயக கட்சியும் பாஜகவும் இணைந்து கடந்த ஆண்டு மார்ச்சில் கூட்டணி அரசை அமைத்தன. மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் முப்தி முகமது சையது முதல்வராகவும் பாஜக மூத்த தலைவர் நிர்மல் குமார் சிங் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர்.
இந்நிலையில் உடல்நலக் குறைவால் முதல்வர் முப்தி முகமது சையது கடந்த ஜனவரி மாதம் காலமானார். இதனைத் தொடர்ந்து முப்தி முகமதுவின் மகளும் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவருமான மெகபூபா முஃப்தி, அம்மாநில முதல்வராக பதவியேற்கக் கூடும் எனக் கூறப்பட்டது.
ஆனால் மெகபூபா உடனே பதவியேற்கவில்லை. அவரது தந்தையின் இறுதிச் சடங்கு முடிந்த பின்னர் பதவியேற்பார் எனவும் கூறப்பட்டது. ஆனால் ஜம்மு காஷ்மீரில் அமலில் உள்ள ஆயுதப்படை சட்டத்தை படிப்படியாக வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பாஜக உறுதி அளித்தால்தான் முதல்வர் பதவி ஏற்பேன் என மெகபூபா பிடிவாதம் காட்டி வருகிறார்.
இதனால் ஜம்மு காஷ்மீரில் புதிய அரசு பதவியேற்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிய அரசு பதவியேற்கும் வரை அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதனிடையே பிடிபி மற்றும் பாஜக இடையே தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும் இந்த பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாத நிலையே தொடர்கிறது.
இந்நிலையில் சட்டசபை கூட்டம் நடைபெற்ற பின் 6 மாதங்களில் புதிய அரசு அமையாவிட்டால் ஏப்ரல் 9-ந் தேதிக்குப் பின்னர் மாநில சட்டசபையை ஆளுநர் கலைக்கக் கூடும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஆளுநரால் சட்டசபையை முடக்கித்தான் வைக்க முடியும்; கலைக்க முடியாது எனவும் கூறப்படுகிறது.
இதனால் புதிய அரசு அமைப்பது குறித்து மக்கள் ஜனநாயகக் கட்சியும் பாஜகவும் இறுதி முடிவெடுத்தாக வேண்டிய நெருக்கடியில் இருக்கின்றன.