காஷ்மீரில் கடும் துப்பாக்கி சண்டை.. 2 தீவிரவாதிகள் தப்பி ஓட்டம்
காஷ்மீர் குல்காம் பகுதியில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் தப்பி ஓட்டம்.
காஷ்மீர்: காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் இருவர் தப்பி ஓடிவிட்டனர். இவர்களைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் நேற்று இரவு தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். பதிலுக்கு இந்திய ராணுவத்தினரும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இன்று காலை வரை நீடித்த இந்தத் துப்பாக்கிச் சண்டையை தாக்குப்பிடிக்க முடியாமல் இரண்டு தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர்.
தப்பி ஓடிய தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், இதுதொடர்பாக தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற இந்தத் தாக்குதலில் அப்பகுதியைச் சேர்ந்த அப்பாவி ஒருவரும் பலியாகியுள்ளார்.
தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதால் அம்மாநிலம் முழுவதற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களில் இரண்டாவது முறையாக தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரத்தில் நான்கு தீவிரவாதிகள் நாக்ரோடாவில் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 2 அதிகாரிகளும் 5 ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.