சிறை விதிமீறல்.. சசிகலாவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அதிரடி திட்டம்?
சிறையில் சொகுசாக வாழ பணம் கைமாறியது குறித்து சசிகலாவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவது குறித்து, விசாரணை கமிஷன் ஆலோசித்து வருவதாக, கூறப்படுகிறது.
பெங்களூரு: பரப்பன அக்ராஹாரா சிறையில் சசிகலா சொகுசாக வாழ பணம் கைமாறியது உண்மை தானா என்பதைக் கண்டறிய சசிகலாவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த விசாரணை கமிஷன் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை பெற்ற சசிகலா பரபப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சிறை கைதியை போல சசிகலா வாழவில்லை. மாறாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். டிஐஜி ரூபா நடத்திய சோதனையில் இது அம்பலமானது.
சிறை அறையில் தங்காமல் சசிகலா அபார்ட்மெண்ட்டில் தங்கியதும் அம்பலமாகியுள்ளது. ஊடகங்களில் வீடியோக்கள் புகைப்படங்கள் வெளியனதால் சசிகலாவிற்கு அளிக்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டிஜிபி சத்தியநாராயணராவிற்கு ரூ. 2 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதகவும் குற்றம் சாட்டினார் ரூபா. இதனிடையே சிறையில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணைக்கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்ட புகார் குறித்து, விசாரணை கமிஷன் தலைவரான வினய்குமார் ஐஏஎஸ், தமிழக எம்எல்ஏக்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார். விரைவில் தமிழகம் வந்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறையில், சசிகலாவை சந்தித்து பேசிய மொபைல் தொடர்புகள் பட்டியலை வினய்குமார் தயாரித்துவருகிறார். சொசுகு வாழ்க்கை வாழ பணம் கைமாறியது உண்மை தானா என்பதை சசிகலாவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும் விசாரணை கமிஷன் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ சசிகலா லஞ்சம் கொடுத்தது உண்மை என்பது தெரியவரும் பட்சத்தில் அவருக்கு தண்டனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.