கடற்படை ஹெலிகாப்டரை என் குடும்பத்தினர் பயன்படுத்தவில்லை: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மறுப்பு
டெல்லி: கோவாவில் நடைபெற்ற திருமணத்திற்குச் செல்ல தமது குடும்பத்தினர் கடற்படை ஹெலிகாப்டரைப் பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகாரை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மறுத்தார்.
கோவாவில் உள்ள சமூக ஊழியர் மற்றும் வழக்கறிஞரான ஐரஸ் ரோட்ரிக்ஸ் இது குறித்து எழுப்பிய புகாரில், அருண் ஜேட்லியின் மனைவி மற்றும் மகள் டிசம்பர் 23-ந் தேதி கடற்படை ஹெலிகாப்டரை சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்தினார்கள் என்று கூறியிருந்தார்.
இதனை மறுத்த அருண் ஜேட்லி, முதலில் எனது மனைவியும் மகனும், மகள் அல்ல. இருவரும் 23-ந் தேதி கோவாவில் இருந்தனர். 2வதாக இவர்கள் எந்த ஒரு அரசு வசதிகளையும் பயன்படுத்தவில்லை எனும் போது, கடற்படை ஹெலிகாப்டரை பயன்படுத்தினர் என்று கூறுவது எப்படி?
3-வதாக இது தனிப்பட்ட பயணம் என்பதால் பாதுகாப்பு அமைச்சர் பரிக்கருக்கு 23ந் தேதி என் குடும்பத்தினர் கோவாவில் இருந்தார்கள் என்பது கூட தெரிந்திருக்கவில்லை என்றார்.
சமூக ஊழியரும் வழக்கறிஞருமான ரோட்ரிக்ஸ் இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.