அவசர சட்டத்திற்கு உடனே அனுமதி.. ஜனாதிபதியிடம் நேரில் வலியுறுத்திய அதிமுக எம்.பிக்கள்
அவசர சட்டத்திற்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுப்பதற்காக அதிமுக லோக்சபா, ராஜ்யசபா எம்.பிக்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்.
டெல்லி: ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க கோரி, குடியரசு தலைவரை அதிமுக எம்.பிக்கள் சந்தித்தனர்.
ஜல்லிக்கட்டு நடத்த வசதியாக தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி, அதை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியது. மத்திய அரசின் சம்மந்தப்பட்ட அமைச்சகங்கள் நேற்று, ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கின. இதையடுத்து, குடியரசு தலைவருக்கு அவசர சட்ட வரைவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த அவசர சட்டத்திற்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுப்பதற்காக அதிமுக லோக்சபா, ராஜ்யசபா எம்.பிக்கள் ராஷ்டிரபதி பவன் சென்று, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். இந்த குழுவிற்கு லோக்சபா துணை சபாநாயகரும், கரூர் அதிமுக எம்.பியுமான தம்பிதுரை தலைமை வகித்துள்ளார்.
இன்று இரவுக்குள் அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் அனுமதி வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டு வரும் சூழலில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.