நாங்கள் தடைவிதித்த ஜல்லிக்கட்டை நீங்கள் எப்படி அனுமதிக்கலாம்? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
டெல்லி: நாங்கள் தடை விதித்த ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நீங்கள் எப்படி அனுமதிக்கலாம் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று கேள்வி எழுப்பியுள்ளது.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஜல்லிக்கட்டு நடத்த 2014ம் ஆண்டு மே மாதம் தடை விதித்தது. தமிழக அரசின் வற்புறுத்தலால், மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த கடந்த ஜனவரி 8ம் தேதி அனுமதி வழங்கி அறிவிக்கை வெளியிட்டது.
ஆனால், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கை ஏற்று, சுப்ரீம் கோர்ட்டு ஜனவரி 14ம் தேதி ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்தது. 2014ம் ஆண்டில் ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பாலிநாரிமன் ஆகியோர் முன்னிலையான அமர்வு முன்பு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜல்லிக்கட்டு விலங்குகளை துன்புறுத்தும் செயல்தான் என கூறி, அனுமதி மறுத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதேநேரம், இந்த வழக்கில் ஜல்லிக்கட்டை அனுமதித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிக்கைக்கு தடைகோரும் மனுக்கள் மீதான விசாரணை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மத்திய அரசு இவ்வாறு ஒரு அனுமதியை பிறப்பித்ததை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வாதிடப்பட்டது.
மத்திய அரசு மற்றும் தமிழக அரசு வழக்கறிஞர்கள் இன்று வாதத்தை முன்வைத்தனர். ஜல்லிக்கட்டு என்பது பாரம்பரியமிக்க நிகழ்ச்சி என்றும், இது ரேஸ் அல்லது கேளிக்கை நிகழ்ச்சி கிடையாது என்றும், தமிழர்களின் கிராமிய திருவிழா என்றும், மத்திய அரசின் வழக்கறிஞர் வாதம் முன்வைத்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையில், அறிவிக்கை மூலம், எப்படி மத்திய அரசு அதை நடத்த அனுமதிக்கலாம்? என கேள்வி எழுப்பி, வழக்கை வரும் 7ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
அதேநேரம், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அமைப்புகள் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.