காஷ்மீர் எல்லையில் மோதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை- ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த மோதலில் ராணுவ வீரர்கள் உட்பட மொத்தம் 6 பேர் பலியாகி உள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநில சட்டபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது. வரலாறு காணாத அளவுக்கு 72% வாக்குகள் பதிவானது.
இந்த நிலையில் 2-ம் முடிந்து கட்ட தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று அங்கு தேர்தல் பிரசாரம் செய்கிறார். தேர்தல் நடைபெறுவதையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜம்மு பிராந்தியத்தில் அர்னியா செக்டாரில் நேற்று 8 தீவிரவாதிகள் எல்லை கடந்து 4 கிலோமீட்டர் தூரம் உள்ளே புகுந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த ராணுவ வீரர்கள் தீவிரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதைத் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே பல மணி நேரம் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கி மோதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 3 ராணுவ வீரர்கள், 3 பொதுமக்கள் உள்பட 6 பேர் பலியாகி உள்ளனர்.
தற்போது அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.