தீவிரவாதி கொல்லப்பட்டதற்கு தொடர்பில்லை... காஷ்மீரில் கலவரம் 3 மாதங்கள் முன்பே தீட்டப்பட்ட சதி
ஸ்ரீநகர்: தீவிரவாதி புர்கான் வானி கொல்லப்படுவதற்கு முன்பே காஷ்மீரில் கலவரம் நடத்த திட்டமிட்டு பணம் வாரி இறைக்கப்பட்ட தகவல் அம்பலமாகியுள்ளது.
ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி, புர்கான் வானி, கடந்த ஜூலை 8ம் தேதி பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டான். மறுநாளான ஜூலை 9ம் தேதி முதல், இந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து, காஷ்மீரில் போராட்டம் வெடித்தது. இதுவரை போராட்டம் தொடருகிறது.
இந்த போராட்டத்திற்காக பாகிஸ்தானில் இருந்து நிதி ஒதுக்கப்பட்ட தகவல் அம்பலமாகியுள்ளது. 3 மாதங்களுக்கு முன்பே காஷ்மீரில் கலவரத்தை உருவாக்க பாகிஸ்தான் உளவு அமைப்பு, அங்கிருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
மே மாதம் புதிதாக பல வங்கி கணக்குகள், காஷ்மீரில் தொடங்கப்பட்டுள்ளன. காஷ்மீரிலுள்ள ராணுவம் மற்றும் உளவுப்பிரிவு அதிகாரிகள் சிலருடன் 'ஒன்இந்தியா' பேசியபோது, இத்தகவல்கள் கிடைத்தன.
புர்கான்வானியின் கொலையை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு கலவரம் வெடிக்க செய்யப்பட்டுள்ளதாகவும், இல்லாவிட்டாலும் இக்கலவரத்திற்கு வேறு காரணம் கற்பித்து நடத்தப்பட்டிருக்கும் என்றும், அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
வங்கியில் 3 மாதம் முன்பு சில முக்கிய பிரமுகர்கள் அக்கவுண்ட் தொடங்கியிருப்பதையும், பணத்தை பெற்றுக்கொண்டு உடனடியாக அக்கவுண்டுகளை மூடிவிட்டதையும் தேசிய பாதுகாப்பு ஏஜென்சி உறுதி செய்துள்ளது.