நீடிக்கும் டோக்லாம் எல்லைப் பிரச்னை... இந்தியாவிற்கு ஆதரவுக்கரம் நீட்டிய முதல் உலக நாடு எது தெரியுமா
இந்தியா சீனா இடையே இரண்டு மாதமாக பதற்றம் நீடிக்கும் நிலையில் முதல் முறையாக ஜப்பான் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது.
டெல்லி : டோக்லாம் விவகாரத்தில் முதல்முறையாக இந்தியாவிற்கு ஜப்பான் ஆதரவு தெரிவித்துள்ளது, அடுத்த மாதம் ஜப்பான் பிரதமர் இந்தியா வரவுள்ள நிலையில் இந்த ஆதரவை ஜப்பான் தெரிவித்துள்ளது.
சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீனப்படைகள் அத்துமீறிய மேற்கொண்ட சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு எல்லையில் தொடர்ந்து பதற்றமான நிலை ஏற்பட்டது
பதற்றமான சூழலால் இந்திய, சீன நாடுகள் எல்லையில் ராணுவத்தை குவித்துள்ளன. இந்திய படைகளை வாபஸ் பெறுமாறு அறிவுறுத்தி வரும் சீனா, அங்கு போர் தொடுக்கப்போவதாக தொடர்ந்து மிரட்டி வருகிறது. இதனால் சிக்கிம் எல்லையில் தொடர்ந்து போர்ப்பதற்றம் நீடித்து வருகிறது.
ஜப்பான் ஆதரவு
டோக்லாம் பகுதிக்கு உரிமை கொண்டாட நினைக்கும் சீனாவின் அத்துமீறலால் இருநாட்டு ராணுவமும் தங்களது படைகளை நிறுத்தி வைத்து உள்ளதால் அங்கு கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பதற்றம் நிலவுகிறது. இரு நாட்டு எல்லைப் பிரச்னையை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன. இந்த நிலையில், டோக்லாம் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவான கருத்தை ஜப்பான் தெரிவித்துள்ளது.
சுமூக தீர்வு
இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் கென்ஜி ஹிரமட்சூ இது குறித்து கூறும்போது" இந்தியா பூடான் நாட்டுடன் போட்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில் சீனா டோக்லம் பகுதியில் சாலை அமைத்து வருகிறது. பிரச்சினைக்குரிய பகுதியில் எது முக்கியம் என்றால், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பும் ஒரு தலைபட்சமான நிலைப்பாட்டை எடுக்காமல் அமைதியான முறையில் சுமூகமாக பிரச்சினையை தீர்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா வருகை
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, அடுத்த மாதம் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், ஜப்பான் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்த விவகாரத்தில் எடுத்துள்ளது.
நான்காவது பெரிய பொருளாதார நாடு
ஆசிய கண்டதிலுள்ள பல தீவுகளால் ஆன சூரியன் உதிக்கும் நாடு என்றும் அழைக்கப்படும் ஜப்பான் உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாகவும் விளங்குகிறது. மேலும் உலகத்தின் 5 வது அதிகபட்ச இராணுவ செலவை கொண்டுள்ள நாடு முதன்முதலாக இந்தியாவிற்கு டோக்லாம் விவகாரத்தில் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.