கர்நாடக அமைச்சரவை ஜூன் 1ல் கூடுகிறது.. ஜெ. அப்பீல் பற்றி முடிவு!
பெங்களூர்: கர்நாடக அமைச்சரவை ஜூன் 1ம் தேதி, கூட உள்ளது. அப்போது, ஜெயலலிதா விவகாரத்தில் அப்பீல் செய்வது குறித்து மீண்டும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுதலை செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சாரியா பரிந்துரை செய்துள்ளார். ஆனால், மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில சட்டப்பிரிவு முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து அமைச்சரவையில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார். இதையடுத்து நேற்றுமுன்தினம், திங்கள்கிழமை மாலை நடைபெற்ற கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில், விவாதப் பொருளாக ஜெயலலிதா அப்பீல் பிரச்சினையும் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திராவிடம் கேட்டபோது, "மாநில அட்வகேட் ஜெனரல் ஊரில் இல்லாததால் அமைச்சரவையில் முடிவெடுக்க முடியவில்லை. அவர் வந்த பிறகு சந்தேகங்கள் சிலவற்றை நிவர்த்தி செய்துவிட்டு முடிவெடுக்கப்படும்" என்று கூறினார்.
இந்நிலையில், ஜூன் 1ம் தேதி கர்நாடக அமைச்சரவை மீண்டும் கூடுகிறது. அப்போது, ஜெயலலிதா விவகாரம் குறித்து மீண்டும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.