ஜெ. வழக்கு: இரண்டு, மூன்று நாட்களில் இறுதி முடிவு- சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா பேட்டி!
பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அட்வகேட் ஜெனரல் பரிந்துரை அளித்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா இன்று பேட்டியளித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை கர்நாடக ஹைகோர்ட் விடுதலை செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று சிறப்பு வழக்கறிஞர் ஆச்சாரியா, அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்மகுமார் ஆகியோர் அரசுக்கு சிபாரிசு செய்திருந்தனர்.
தலைமை வக்கீல் விளக்கம்
இந்நிலையில் கர்நாடக அரசு வழக்கு தொடர்பான இரு சந்தேகங்களை ரவிவர்மகுமாரிடம் கேட்டிருந்தது. அதற்கும் ரவிவர்மகுமார் விளக்கம் அளித்துள்ளார். அதாவது ஆச்சாரியாவை சிறப்பு வக்கீலாக தொடரச் செய்வதில் கர்நாடக அரசுக்கு எந்த தடையும் இல்லை என்றும், மேல்முறையீடு செய்ய ஆளுநர் அனுமதி தேவையில்லை என்றும் ரவிவர்மகுமார் தெளிவுபடுத்தி அரசுக்கு அறிக்கையளித்துள்ளார்.
எச்சரிக்கை
ரவிவர்மகுமார் அளித்த அறிக்கையில், கர்நாடக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும், அல்லது உச்சநீதிமன்றம், கர்நாடகா மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு மோசடி செய்தது போல ஆகிவிடும். நீதித்துறையை கேலிக்கூத்தாக்கும் செயலாகிவிடும் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார்.
காலம் உள்ளது
இதுகுறித்து கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயச்சந்திராவை நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது: இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய அதிகபட்சம் 90 நாட்கள் கால அவகாசம் உள்ளது. தற்போது தீர்ப்பு வெளியாகி 20 நாட்கள்தான் ஆகியுள்ளன. நாங்கள் அனைத்து கோணத்திலும் ஆய்வு நடத்திய பிறகுதான், முடிவெடுக்க முடியும்.
இனிதான் படிக்க வேண்டும்
அட்வகேட் ஜெனரலிடம் இருந்து சந்தேகங்களை நிவர்த்தி செய்து வந்த அறிக்கையை பெற்றுள்ளேன். அந்த அறிக்கையை இன்னும் படிக்கவில்லை. கிராம பஞ்சாயத்து தேர்தலையொட்டி, கிராமங்களில் சுற்றுப் பயணம் செய்துகொண்டிருந்தேன். எனவே இனிதான் அறிக்கையை படிக்க வேண்டும். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் இதன்மீது முடிவெடுக்கப்படும் என்றார்.
கேபினெட் பற்றி தெரியாது
திங்கள்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயச்சந்திரா "வழக்கில் வெளியான தீர்ப்பு, ஆச்சாரியா அளித்த பரிந்துரை, அட்வகேட் ஜெனரல் கொடுத்த விளக்கம் போன்ற பல அம்சங்களை சட்டத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதையெல்லாம் படித்து பார்த்து, நான் திருப்தியடைந்த பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்க முடியும். அமைச்சரவையுடன் இதை முடிச்சு போட விரும்பவில்லை" என்றார். அமைச்சரவை கூட்டத்துக்கு முன்பு, ஜெயச்சந்திரா திருப்தியடைந்தால், கேபினெட்டில் இதுகுறித்து விவாதிக்கப்படும், அல்லது மேலும் சில நாட்களுக்கு ஒத்திப்போடப்படும் என்று தெரிகிறது.