அப்பீல் செல்ல கேபினட் முடிவு ஏன்?: ஜெ. வழக்கில் சித்தராமையாவின் 'ராஜதந்திரம்'
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால், இதை ஏன் அமைச்சரவையை கூட்டி முடிவெடுத்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஹைகோர்ட் அவரை விடுதலை செய்தது. இந்நிலையில், வழக்கில் மேல்முறையீடு செய்ய அதிகாரம் உள்ள கர்நாடக அரசோ, தீர்ப்பு வந்து 20 நாட்கள் வரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
அமைச்சரவை முடிவு
நேற்று முன்தினம் திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், அப்பீல் செய்ய முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. தொடக்கம் முதலே, அமைச்சரவையில் முடிவெடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் என்றுதான் முதல்வர் சித்தராமையாவும், சட்ட அமைச்சர் ஜெயச்சந்திராவும் கூறிவந்தனர். ஆனால், இதில் அமைச்சரவை தலையீடு என்பதே அனாவசியம் என்பதுதான் எஞ்சி நிற்கும் உண்மை.
உள்ளூரிலே கண்டுகொள்வதில்லை
ஏனெனில், கர்நாடகா தொடர்புள்ள தலைவர்களுக்கு எதிரான மேல்முறையீட்டின்போது கூட கர்நாடக அரசு அமைச்சரவையில் அதை விவாதித்தது இல்லை. பொதுவாக யார்மீதாவது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடிவெடுக்கும் அதிகாரம்தான் அமைச்சரவைக்கு உண்டு. "உரம் கேட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கை இந்த அமைச்சரவை ரத்து செய்கிறது" என்பது போன்ற அறிவிப்புகள்தான் வழக்கமாக கர்நாடக அமைச்சரவையில் இருந்து வரும். அமைச்சரவையில் விவாதிக்க தேவையில்லாத ஒரு விவகாரம்தான் மேல்முறையீடு என்பது.
சாதாரண நடவடிக்கை
சட்டத்துறை வல்லுநர்களும் அதே கருத்தைதான் கூறுகின்றனர். மேல்முறையீடு என்பது சட்ட நடவடிக்கையின் ஒரு அங்கம். இதற்கு சிறப்பு முக்கியத்துவம் தர தேவையே கிடையாது. அப்பீலுக்கு செல்ல தகுதியுடைய வழக்கா இல்லையா என்பதை சட்டத்துறை ஆராய்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதுதான் வழக்கம். ஆனால் ஜெயலலிதா வழக்கில் மட்டும் ஏன் அமைச்சரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்ற கேள்வியை மூத்த சட்ட வல்லுநர்கள் கேட்கிறார்கள்.
கோஷ்டி பூசல்
ஜெயலலிதா வழக்கை பொறுத்தளவில், இது சட்ட நடைமுறையாக இல்லாமல், அரசியல் சார்புடையதாக இருந்ததுதான் அமைச்சரவை தலையீட்டுக்கு காரணம் என்கிறது கர்நாடக காங்கிரஸ் வட்டாரம். ஏனெனில் ஜெயலலிதா விவகாரத்தில் அப்பீல் வேண்டாம் என்றும், வேண்டும் என்றும், கர்நாடக காங்கிரசிலேயே பல்வேறு குரல்கள் ஒலித்துள்ளன. மூத்த அமைச்சர் சிவகுமார் தலைமையிலான கோஷ்டிகள், மேல்முறையீடு வேண்டாம் என்றும், சித்தராமையாவுக்கு நெருக்கமான அமைச்சர்கள் வேண்டும் என்றும் கூறிவந்தனர்.
பிளவுபட்ட கருத்து
மக்கள் மத்தியில், மேல்முறையீடு அவசியம் என்ற கருத்து இருந்தாலும், மேல்முறையீடு செய்தால், தமிழக முதல்வர் கோபமடைந்துவிடுவாரோ, காவிரி பிரச்சினை அதிகரித்துவிடுமோ என்ற அச்சமும் இருந்தது. எனவே, அப்படியே விட்டுவிட்டால் நமக்கு நல்லதுதானே என்ற எண்ணம் தென் கர்நாடக பகுதி மக்களில் பலருக்கு இருந்தது. காங்கிரஸ் மேலிட மட்டத்திலும் இதுபோன்ற கருத்து வேறுபாடுகள் இருந்தன. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான், சித்தராமையாவும், ஜெயச்சந்திராவும், கேபினெட் மீது பாரத்தை இறக்கிவிட்டனர் என்று கூறப்படுகிறது.
தப்பித்தால் போதும்
தற்போது அமைச்சரவையே இந்த முடிவை எடுத்துள்ளதால் விமர்சனங்கள் நேரடியாக சித்தராமையாவோ, ஜெயச்சந்திராவையோ பாதிக்காது. அரசின் கூட்டு முடிவாக கேபினெட் முடிவு பார்க்கப்படும் என்பதால் தப்பிவிடலாம் என்று நினைக்கிறாராம் கர்நாடக முதல்வர். எனவேதான், சட்ட நடைமுறையில் சாதாரண விஷயத்தை கேபினெட் வரை எடுத்துச் சென்றுள்ளனர்.