ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு: சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்ய கர்நாடகாவுக்கு உரிமையுள்ளதா?
டெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக அரசுக்கு அப்பீல் செய்ய உரிமையுள்ளதா, இல்லையா என்ற வாதம் சுப்ரீம்கோர்ட்டில் நடைபெற வாய்ப்புள்ளதாக சட்ட வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் கர்நாடக ஹைகோர்ட்டில் செய்த மேல்முறையீட்டின்போது, தனிக்கோர்ட்டு தீர்ப்பை நீதிபதி குமாரசாமி ரத்து செய்ததுடன், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார்.
இதனை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றது. விசாரணையை ஜனவரி 8ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
நீதிபதிகள்
இந்தநிலையில், சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்கும் விசாரணை நீதிபதி மாற்றம் செய்யப்பட்டார். நீதிபதி ஆர்.கே அகர்வாலுக்கு பதிலாக அமித்வா ராய் விசாரிப்பார் என்று தெரிவிக்கப்படுள்ளது. மற்றொரு நீதிபதியாக பினாகி சந்திரகோஷ் தொடர்கிறார்.
முத்தரப்பு
ஜனவரி 8ல் வழக்கு விசாரணைக்கு வந்தபோது "ஜெயலலிதா உள்ளிட்டோர் சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு, அன்பழகன் ஜெயலலிதா ஆகியோர் பதில் அளிக்க வேண்டும். பிப்ரவரி 2ம் தேதிக்கு முன்பாக பதில் அளிக்க வேண்டும். அதில் விசாரணையின்போது எந்தெந்த அம்சங்களில் சந்தேகம் உள்ளதோ அந்த விஷயங்களை மட்டும் தெரிவித்து, பதில் இருக்க வேண்டும். பிப்ரவரி 2ம் தேதி முதல் இறுதி விசாரணை நடத்தப்படும்" என கூறினர்.
பதில்கள்
இதையடுத்து முதலில் கர்நாடக தரப்பும், பின்னர், ஜெயலலிதா தரப்பும், மூன்றாவதாக அன்பழகன் தரப்பும், தங்கள் பதில் மனுக்களை தாக்கல் செய்துவிட்டன. எவற்றையெல்லாம் விசாரிக்க வேண்டும் என்ற பாயிண்டுகளை மட்டுமே இத்தரப்புகள் தெரிவித்துள்ளன.
கர்நாடகாவுக்கு உரிமையில்லை
ஜெயலலிதா தரப்போ, இதில் கர்நாடகா தலையிட உரிமையே கிடையாது என்று கூறி பதில் தாக்கல் செய்துள்ளது. கர்நாடகாவில் வழக்கை நடத்தும்போதுதான், கர்நாடக அரசுக்கு பொறுப்பு உள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தில், வழக்கை நடத்த கர்நாடக அரசுக்கு உரிமை இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
முதலில் விசாரணை
அப்பீல் வழக்கின் அடிப்படையையே ஆட்டும் வகையில் இந்த வாதம் முன் வைக்கப்பட்டுள்ளதால், அதுகுறித்து முதலில் உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தும் என்று கர்நாடக சட்டத்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.
ஹைகோர்ட்டில் செட்டிலானது
இதுபோன்ற கேள்வி ஏற்கனவே கர்நாடக ஹைகோர்ட்டில் கர்நாடகா அப்பீல் செய்தபோதும் எழுந்து, அதில் கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா ஆஜராக உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இருப்பினும், உச்சநீதிமன்றத்திற்கு இந்த விதிமு்றையில் மாற்றம் உண்டா என்ற விவாதம் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தாமத டெக்னிக்
கர்நாடக சட்டத்துறை வல்லுநர்களோ, கர்நாடகாவுக்கு அப்பீல் செய்ய முழு உரிமையுள்ளது என கூறிவருகிறார்கள். இது ஜெ. தரப்புக்கு தெரிந்திருந்தும், வழக்கு விசாரணை கொஞ்சம் இழுக்கலாம் என திட்டமிட்டு இதுபோல ஒரு வாதத்தை முன்வைத்திருக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
வாய் திறக்காதீர்கள்
ஜெயலலிதா தரப்பு கூறியுள்ள கருத்துக்கு கோர்ட்டிலேயே பதில் சொல்வது என்றும், அரசு பிரமுகர்கள் யாரும் வெளிப்படையாக கருத்து கூறக்கூடாது என்றும் முதல்வர் சித்தராமையாவால், வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளதாம்.