ஜெ. வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசிடம் ஆச்சாரியா அடுக்கிய காரணங்கள்!
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையாகி, முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில், அந்த வழக்கில் மேல்முறையீடு நடக்குமா, நடக்காதா என்பதில் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது.
இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சாரியாவோ, ஆணித்தரமாகவே தந்து கருத்தை கர்நாடக அரசுக்கு அளித்த சிபாரிசில் கூறியுள்ளார். இந்த வழக்கு மேல்முறையீட்டுக்கு முற்றிலும் உரியது என்று ஆச்சாரியா கூறியுள்ளார்.
அவகாசம் இல்லை
ஆச்சாரியாவின் கடிதத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: மேல்முறையீட்டு விசாரணையில் கர்நாடக அரசு நியமித்த அரசு வழக்கறிஞரான எனக்கு இந்த வழக்கில் என்னுடைய வாதத்தை எடுத்துவைக்க போதிய அவகாசம் வழங்கப்படவில்லை. பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட வழக்கில் என்னுடைய வாதத்தை வெறும் 18 பக்கங்களில் தெரிவிப்பது என்பது சாத்தியமில்லாதது. ஆனால், எனக்கு அப்படிப்பட்ட சாத்தியமில்லாத வாய்ப்பு ஒன்றே வழங்கப்பட்டது.
ஹைகோர்ட் பரிசீலிக்கவில்லை
ஆனால், அந்த உத்தரவை வழங்கிய உச்ச நீதிமன்றம் கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதிக்கு, நான் தரும் வாதங்களை மிகக் கவனமாக பரிசீலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது. ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதி அப்படி பரிசீலிக்கவில்லை என்பது அவர் வழங்கிய தீர்ப்பில் இருந்து தெரிகிறது.
வரலாறு
நீதிபதி வழங்கிய தீர்ப்பில், 737 பக்கங்களுக்கு மேல் வெறும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் வழக்கின் பழைய வரலாறுகள்தான் இடம் பெற்றுள்ளன. அதில், 738ம் பக்கத்துக்கு மேல், மேல்முறையீடு செய்தவர்களுக்குச் சாதகமான பல வழக்குகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. மற்றபடி அந்தத் தீர்ப்பில், எந்தவிதமான ஆய்வும் இல்லை. ஆனால், மாறாக குற்றவாளிகளுக்குச் சாதகமாகக் கணக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
கணக்கு காட்டப்பட்டுள்ளது
10 சதவிகிதம் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்க்கலாம் என்று வெளியான தீர்ப்பையும், ஆந்திர அரசாங்கம் 20 சதவிகிதம் வரை வருமானத்துக்கு அதிகமான சொத்து ஒரு அரசாங்க ஊழியரிடம் இருக்கலாம் என்று சொல்லியிருப்பதையும் மட்டும் எடுத்துக்கொண்டு அதற்கேற்றவாறு குற்றவாளிகளின் சொத்துகளை கணக்கு காட்டும் வகையில் கணக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனால்தான் அந்தத் தீர்ப்பில் மிகப் பெரிய கணக்குப் பிழை நேர்ந்தது.
உருவாக்கப்பட்ட கணக்கு
சிறப்பு நீதிமன்றம் இந்தக் கணக்கீட்டை செய்தபோது, நியாயமான காரணங்கள், போதிய ஆதாரங்கள் என்று அனைத்தையும் கணக்கில் கொண்டது. ஆனால், உயர் நீதிமன்றம் அப்படிச் செய்யாமல், தன்னுடைய முடிவுக்கு ஏற்ப கணக்கீட்டை உருவாக்கி உள்ளது. உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முக்கிய அடிப்படையான விஷயங்களாகக் கட்டிட மதிப்பீட்டையும், திருமணச் செலவுகளையும் அதிகம் ஆராய்ந்துள்ளது. மற்றபடி தங்க வைர நகைகள், திராட்சைத் தோட்டம் போன்றவை பற்றி பெரிதாக கவனம் எடுத்துக் கொள்ளவில்லை.
கட்டிட மதிப்பு குறைந்தது
கட்டிட மதிப்பில் அரசுத் தரப்பு சொன்னது ரூ.28 கோடி. ஆனால், பொறியாளர்களின் மதிப்பீட்டை ஒட்டு மொத்தமாகப் புறக்கணித்துவிட்டு வெறும் 5 கோடி ரூபாய் என்று எடுத்துக் கொண்டுள்ளார். எந்த அடிப்படையில் இவர் 5 கோடி ரூபாய் என்று எடுத்துக் கொண்டார் என்பதற்கு தீர்ப்பில் உரிய விளக்கம் இல்லை.
திருமண செலவுக்கு ஆதாரம்..
திருமணத்துக்கு ஆன செலவு என்று அரசுத் தரப்பு குற்றம்சாட்டியது ரூ.6 கோடி. ஆனால், அரசுத் தரப்பிடம் இருந்த ஆவணங்களின் அடிப்படையில் அந்த திருமணத்துக்கு ஆன செலவு என்று சிறப்பு நீதிமன்றம் மூன்று கோடி ரூபாயைக் கணக்கிட்டது. அந்த மூன்று கோடி ரூபாய் சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் செய்யப்பட்ட கணக்கீடு. ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதி அதற்கு ஜெயலலிதா செய்த செலவு என்று வெறும் 28 லட்ச ரூபாயைக் கணக்கிட்டுள்ளார். இதை எந்த ஆவணங்களின் அடிப்படையில் அவர் ஏற்றுக்கொண்டார்? அதில் செய்யப்பட்ட மற்ற செலவுகளுக்கு யார் பொறுப்பு? அதை மற்றவர்கள் செய்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரங்களை அவர் பார்வையிட்டார் என்பதை தீர்ப்பில் கூறவில்லை.
கணக்கிலேயே தவறு
தேசிய வங்கிகளில் வாங்கப்பட்ட கடன் தொகையை வருமானமாகக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதைக் கணக்கிடும்போது மிகப் பெரிய தவறு நிகழ்ந்துள்ளது. அந்தத் தொகையை கணக்கிட்டு உயர் நீதிமன்ற நீதிபதி, ரூ.24,17,31,274 என்று காட்டி உள்ளார். இதில் பெரிய தவறு நடந்துள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டுள்ள தொகைகளை கூட்டினால் வெறும் 10,67,31,274 ரூபாய்தான் வருகிறது. இந்தச் சரியான தொகையை கணக்கில் எடுத்துக் கொண்டு ஜெயலலிதாவின் வருமானத்துக்கு அதிகமான சொத்து மதிப்பைக் கணக்கிட்டால் 76 சதவிகிதம் அதிகமாக வருகிறது. உயர் நீதிமன்ற நீதிபதி சொல்லும் 8 சதவிகிதம் என்பது வலுவிழந்து விடுகிறது.
ஊழலை ஊக்குவிக்கும்
எனவே அந்த கணக்கு அடிப்படையில் நான்கு பேரையும் விடுதலை செய்ததும் நடைமுறை சாத்தியமில்லாததாகிவிடுகிறது. எனவே, இந்த வழக்கில் உறுதியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால், உயர்ந்த இடத்தில் நடைபெறும் ஊழலை அரசாங்கம் ஊக்குவிப்பதுபோல் அர்த்தமாகும்.
சொத்துக்களையும் பாதிக்கிறது
மேலும், ஊழலுக்கு எதிராக மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் யாருக்கும் ஒருதுளிகூட நம்பிக்கை ஏற்படாது. ஏனென்றால், இதில் மேல்முறையீடு செய்யவில்லை என்றால், நாம் ஊழலைச் சகித்துக்கொள்கிறோம் என்று அர்த்தமாகிவிடும். இந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு, ஊழல் செய்த குற்றவாளிகளை மட்டும் காப்பாற்றவில்லை. மாறாக அவர்கள் ஊழல் செய்து சம்பாதித்த சொத்துகளையும் சேர்த்துக் காப்பாற்றுவதுபோல் இருக்கிறது. எனவே, இதில் கண்டிப்பாக மேல்முறையீடு செய்ய வேண்டும். இவ்வாறு ஆச்சாரியா தனது சிபாரிசில் கூறியுள்ளார்.