ஜெ. வழக்கு: 'பல்டி' பவானி சிங்கை மாற்றக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தேமுதிக வக்கீல் மனு
டெல்லி: ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்த பவானி சிங்கே தொடர்ந்து அந்த பதவியில் செயல்பட அனுமதிக்க கூடாது என்று கூறி தேமுதிக வழக்கறிஞர் ஜி.எஸ். மணி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் பவானி சிங் தான் அரசு வழக்கறிஞராக இருந்தார். அதன் பிறகு ஜெயலலிதா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோதும் பவானி சிங் தான் அரசு வழக்கறிஞராக ஆஜரானார். காலையில் ஜெயலலிதாவை ஜாமீனில் வெளியே விட கடும் எதிர்ப்பு தெரிவித்த அவர், மதிய வேளையில் அவருக்கு ஜாமீன் அளிக்கலாம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், தேமுதிகவைச் சேர்ந்தவருமான ஜி.எஸ்.மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற ஆணைப்படி பெங்களூர் சிறப்பு நீதிமன்பத்தில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் இருந்துள்ளார். வழக்கின் தீர்ப்பு வெளியான பின்னர், பவானி சிங்கே அரசு வழக்கறிஞராக தொடர்வது முறையல்ல. அதற்கு உச்ச நீதிமன்ற உத்தரவு தேவை.
மேலும், ஜெயலலிதாவின் ஜாமீன் மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, முன்னுக்கு பின் முரணாக கருத்துக்களை பவானி சிங் தெரிவித்தார். இதன் காரணமாக அவரது நடவடிக்கைகளில் முரண்பாடு இருப்பதால், அவரை மாற்ற வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.