ஜெ. வழக்கில் மேல்முறையீடு: நாளை மறுநாள் கர்நாடக அமைச்சரவை இறுதி முடிவு!
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கர்நாடக அட்வகேட் ஜெனரல் பரிந்துரைத்துள்ள நிலையில், வரும் திங்கள்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் கர்நாடக ஹைகோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்ய வேண்டும் என்று சிறப்பு வக்கீல் ஆச்சாரியா மற்றும் கர்நாடக அட்வகேட் ஜெனரல் ரவிவர்மகுமார் ஆகிய இருவருமே, மாநில அரசுக்கு சிபாரிசு செய்திருந்தனர்.
அமைச்சரவை இழுபறி
கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது அமைச்சரவையில் இரு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஜெயலலிதா தற்போது தமிழக முதல்வராக பதவி வகிப்பதால் அவருக்கு எதிராக அப்பீல் செய்ய ஆளுநர் அல்லது சுப்ரீம்கோர்ட்டிடம் இருந்து அனுமதி பெற வேண்டுமா என்பது ஒரு சந்தேகம்.
அட்வகேட் ஜெனரல் விளக்கம்
மற்றொரு சந்தேகம், சுப்ரீம்கோர்ட்டில் அரசு வக்கீலாக தற்போது நியமிக்கப்பட்ட ஆச்சாரியாவையே தொடரச் செய்ய முடியுமா, அதற்கான அதிகாரம் கர்நாடகாவுக்கு உள்ளதா என்பதாகும். இவ்விரு சந்தேகங்களுக்கும் ரவிவர்மகுமார் விளக்கம் அளித்து நேற்று அரசுக்கு அறிக்கையளித்துள்ளார்.
ரூட் கிளியர்
அந்த அறிக்கையில், உடனடியாக ஜெயலலிதா வழக்கில் அப்பீல் அவசியம் என்று கூறியுள்ள ரவிவர்மகுமார், ஜெயலலிதாவுக்கு எதிரான அப்பீலுக்கு யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை, என்றும், அரசு வக்கீலாக ஆச்சாரியா தொடருவதில் பிரச்சினை இல்லை என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டார்.
நாளை மறுநாள்
எனவே ஜூன் 1ம்யான வரும் திங்கள்கிழமை நடைபெற உள்ள கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் மேல்முறையீடு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இனிமேலும், தாமதம் செய்ய கர்நாடக அரசுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதால் வேறு வழியின்றியாவது, சுப்ரீம்கோர்ட் சென்றாக வேண்டிய கட்டாயத்தில் கர்நாடக அரசு உள்ளது.