பவானிசிங் நியமனம் மோசமானதுதான்.. ஆனாலும் அவரை மாற்ற வேண்டியதும் இல்லை: உச்சநீதிமன்றம்
டெல்லி: ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங்கை தமிழக அரசு நியமித்தது மோசமானதுதான்.. ஆனால் அதற்காக அவரை மாற்ற வேண்டியது இல்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மேல்முறையீட்டு வழக்கிலும் அரசு வழக்கறிஞராக பவானிசிங்கே ஆஜராவார் என தமிழக அரசு நியமித்தது.
உச்சநீதிமன்றத்தில் மனு
இந்த நியமனத்தை எதிர்த்து தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் அன்பழகன் மனுத்தாக்கல் செய்தார்.
இருவேறு தீர்ப்பு
இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் லோகூர், பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இரு வேறுபட்ட தீர்ப்புகளைத் தந்தது. அதாவது பவானிசிங் நியமனம் சட்டவிரோதமானது என நீதிபதி லோகூரும் பவானிசிங் நியமனம் சரியானது என நீதிபதி பானுமதியும் தீர்ப்பளித்தனர்,
3 பெஞ்சுக்கு மாற்றம்
இதனால் நீதிபதி மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த பெஞ்சில் நீதிபதிகள் அகர்வால், பி.சி. பந்த் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
பவானிசிங் நியமனம் செல்லாது- அதிரடி தீர்ப்பு
நீதிபதி மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச், ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்க தமிழகத்துக்கு அதிகாரம் இல்லை; கர்நாடகா அரசுக்குத்தான் முழு அதிகாரமும் உண்டு; பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்தது சட்டத்தின் அடிப்படையில் மோசமானதுதான். ஆனால் அதற்காக அவரை மாற்ற வேண்டியதும் இல்லை என்று தீர்ப்பளித்தது.
அதாவது பவானிசிங் நியமனம் செல்லாது; அதற்காக புதியதாக ஒருவரை நியமிக்க வேண்டியதில்லை என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.