ஜெயலலிதாவும் இதே மாதிரி ரூம்லதான் தங்கியிருந்திருப்பாரோ!
பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா சிறப்பு வசதிகளுக்காக ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்த சம்பவத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட அறைகளை பார்த்தால் இப்படிப்பட்ட அறையிலா முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இருந்திருப்பாரோ
பெங்களூர்: பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்ட அறையை பார்க்கும்போது ஜெயலலிதாவும் இது போன்ற அறையில்தான் தங்கியிருந்திருப்பாரோ என்று நினைத்தாலே பகீர் என உள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சசிகலா தங்கிய நாள் முதல் விதிகளை மீறி வருவதாக தகவல்கள் வெளி வந்தன.
தனி சமையலறை
சசிகலாவுக்கு சிறையில் 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்ததாக டிஐஜி ரூபா மேற்கொண்ட ஆய்வில் அம்பலமானது. சிறையில் உள்ள சசிகலாவின் அறையில் தனி சமையலறை, யோகா பயிற்சி, டிவி பார்க்க தனித்தனி அறைகள் உள்ளிட்ட வசதிகள் இருந்தன. தனி வசதிகளுக்காக சசிகலா தரப்பில் இருந்து சிறை துறைக்கு அவர் ரூ. 2 கோடி லஞ்சம் அளித்ததாக தகவல்கள் வெளிவந்தன.
மோசமான அறை
அழுக்கு படிந்த சுவர் ஒரு சிறிய அறையில் சமைக்க பயன்படுத்தப்படும் குக்கர், சில பாத்திரங்கள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்டவை மிகவும் அலங்கோலமான நிலையில் இருந்தன. சசிகலா இருப்பதை யாரும் பார்க்கக் கூடாது என்பதற்காக அறையின் கதவில் ஒரு அழுக்குத் துணி தொங்கவிடப்பட்டுள்ளது.
இதற்காக ரூ. 2 கோடி
இது போன்று பார்ப்பதற்கே அருவெறுக்கத்தக்க அறைக்காக ரூ. 2 கோடி செலவு செய்துள்ளதை பார்க்கும்போது, வினை விதைத்தவன், வினை அறுப்பான் என்ற பழமொழிதான் ஞாபகத்துக்கு வருகிறது. வெறியாட்டம் போட்ட சசிகலாவுக்கு என்ன 5 ஸ்டார் ரூம் போன்ற அறையா கிடைக்கும்?
பெண் சிங்கம் ஜெயலலிதா
சசிகலாவை விடுங்கள்... இந்திய அரசியலிலேயே பெண் சிங்கம் போல் இருந்தவர் ஜெயலலிதா. அவர் இருந்தபோது யாரை கண்டும் அஞ்சியதில்லை. அப்படிப்பட்ட ஜெயலலிதாவும் இந்த சசிகலா கூட்டத்தின் பேராசைக்கு உடந்தையாகி சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 2014-ஆம் ஆண்டு சிறிது நாள்கள் பரப்பன அக்ரஹாார சிறையில் இருந்தார்.
பகீர் என்கிறது
ஜெயலலிதாவும் இதுபோன்ற அறையில்தான் தங்க வைக்கப்பட்டிருந்திருப்பாரோ என்பதை நினைக்கும்போது நெஞ்சம் பதைபதைக்கிறது. போயஸ் தோட்டத்தில் ராணி போல் வலம் வந்த ஜெயலலிதா, இதுபோன்று அழுக்கு படிந்த சுவர் கொண்ட அறையில்தான் இருந்திருப்பார் என்பதை நினைத்து பார்க்கும்போதே அதிர்ச்சியாக இருக்கிறது.
கூடா நட்பு
அத்தனை செல்வாக்கு உள்ள ஜெயலலிதா பரப்பன அக்ரஹார சிறையில் இருந்தவரை தன் மீது குற்றச்சாட்டு இருந்தாலும் அதை போராடி வெற்றி கண்டாரே தவிர, சசிகலா போல் லஞ்சம், விதிமீறல் உள்ளிட்ட அலப்பறையில் ஈடுபட்டதே இல்லை. லோக்சபா தேர்தலில் மோடியையே எதிர்த்து அவரே ஆட்டம் காணும் அளவுக்கு கர்ஜித்த ஜெயலலிதா கூடா நட்பின் காரணமாக எத்தனை கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.