தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுப்பது அரசியல் சாசனத்தை மீறும் செயல்: ஜெயலலிதா #Cauvery
டெல்லி: தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க மறுப்பது அரசியல் சாசனத்தை மீறும் செயலாகும் என டெல்லியில் உமாபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதியில் ஒருபோக சம்பா பயிரையாவது காப்பற்ற நீர் திறப்பது அவசியம் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை அமல் படுத்தாமல், சீராய்வு மனு ஒன்றை கர்நாடக மாநிலம் உச்ச நீதிமன்றத்தில் அளித்திருந்தது. அதேசமயம், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை. எனவே, அம் மாநிலத்தின் எந்த மனுக்களையும் பரிசீலிக்கக் கூடாது என்று தமிழக அரசு சார்பில் பதில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், தனது உத்தரவை அமல்படுத்தாத கர்நாடக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தது. மேலும், காவிரியிலிருந்து செப்டம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் தமிழகத்திற்கு விநாடிக்கு 6000 கனஅடி நீர் திறக்க வேண்டும். இரு மாநில முதல்வர்களை அழைத்து மேலாண்மை வாரியம் அமைக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக தமிழக, கர்நாடக மாநில பிரதிநிதிகளுடன் பேச வேண்டும் என உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக தமிழக, கர்நாடக மாநில பிரதிநிதிகளுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி, டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், தமிழக முதல்வர் சார்பில் பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசு மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, ஜெயலலிதாவின் காவிரி தொடர்பான உரையை அமைச்சர் வாசித்தார்.
ஜெயலலிதா உரையின் முக்கிய அம்சங்கள் :
- கர்நாடகா நீர் தர மறுப்பதை, நீதிமன்ற அவமதிப்பாக கருத வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடகா மீறுவது அரசியல் சாசனத்தை மீறும் செயலாகும். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும்.
- உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடகா நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். கர்நாடகா நீர் தர மறுப்பதை நீதிமன்ற அவமதிப்பாக கருத வேண்டும்
- தமிழகத்துக்கு காவிரியில் கர்நாடக அரசு குறைவான தண்ணீரையே வழங்கி உள்ளது. சம்பா நெல் சாகுபடிக்கு கர்நாடகம் வழங்கிய தண்ணீர் போதுமானதல்ல. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் விட மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
- காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒரு போக சம்பா சாகுபடிக்காவது கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும். மேலும், தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுப்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்றும், அரசியல் சாசனத்தை மீறும் செயலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
- தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் கிடைப்பதை மத்திய அரசு உறுதிசெய்யவேண்டும். காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை அனுமதிக்கக் கூடாது.
- காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கையை நீதிமன்ற அவமதிப்பாக கருத வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் ஜெயலலிதா தனது உரையில் வலியுறுத்தி உள்ளார்.
- கூட்டத்திற்கு முன்னர் உமா பாரதியின் அன்புக் கட்டளைக்கு இணங்க இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர். எடப்பாடி பழனிச்சாமியுடன் கைகுலுக்கிய சித்தராமையா, ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடவே முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.