ஜெ. வழக்கில் உடனே அப்பீல் செய்க! கர்நாடக அரசுக்கு அட்வகேட் ஜெனரல் அதிரடி அறிக்கை!
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் வழக்கு தொடர வேண்டியது மிகவும் அவசியம் என்று கர்நாடக அட்வகேட் ஜெனரல் ரவிவர்மகுமார், அம்மாநில அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் கர்நாடக ஹைகோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்ய வேண்டும் என்று சிறப்பு வக்கீல் ஆச்சாரியா மற்றும் கர்நாடக அட்வகேட் ஜெனரல் ரவிவர்மகுமார் ஆகிய இருவருமே, மாநில அரசுக்கு சிபாரிசு செய்திருந்தனர்.
இரு சந்தேகங்கள்
கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது அமைச்சரவையில் இரு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஜெயலலிதா தற்போது தமிழக முதல்வராக பதவி வகிப்பதால் அவருக்கு எதிராக அப்பீல் செய்ய ஆளுநர் அல்லது சுப்ரீம்கோர்ட்டிடம் இருந்து அனுமதி பெற வேண்டுமா என்பது ஒரு சந்தேகம்.
அறிக்கை
மற்றொரு சந்தேகம், சுப்ரீம்கோர்ட்டில் அரசு வக்கீலாக தற்போது நியமிக்கப்பட்ட ஆச்சாரியாவையே தொடரச் செய்ய முடியுமா, அதற்கான அதிகாரம் கர்நாடகாவுக்கு உள்ளதா என்பதாகும்.
இவ்விரு சந்தேகங்களுக்கும் ரவிவர்மகுமார் விளக்கம் அளித்து நேற்று அரசுக்கு அறிக்கையளித்துள்ளார். அந்த அறிக்கையிலுள்ள அம்சங்கள் தற்போது மீடியாக்களுக்கு கசிந்துள்ளன. அதில் ரவிவர்மகுமார் கூறியுள்ளதாவது:
கர்நாடகா மீது நம்பிக்கை
2003ம் ஆண்டில், சொத்துக்குவிப்பு வழக்கை தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு மாற்றியது சுப்ரீம்கோர்ட், கர்நாடக நீதித்துறை மீதும், இம்மாநிலத்தின் மீதும் கொண்ட நம்பிக்கைதான், சுப்ரீம்கோர்ட் இவ்வழக்கை கர்நாடகாவுக்கு மாற்றுவதற்கு காரணம். சொத்துக்குவிப்பு வழக்கை ஒரு முடிவுக்கு கொண்டுவந்தால்தான் கர்நாடகா மீதான நம்பிக்கை காப்பாற்றப்படும். எனவே, உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா மேல்முறையீடு செய்வது அதன் கடமையாகும்.
நம்பிக்கை துரோகம்
உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா மேல்முறையீடு செய்யாவிட்டால், அது நீதித்துறையை கேலி செய்வது போல ஆகிவிடுவதோடு, கர்நாடக மாநிலம் மீது உச்சநீதிமன்றம் வைத்துள்ள நம்பிக்கைக்கு துரோகம் செய்வதைப்போலவும் ஆகிவிடும். எனவே, கூடிய விரைவில் உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். ஆச்சாரியாவையே சிறப்பு வழக்கறிஞராக கர்நாடகம் தொடரச் செய்யலாம்.
அனுமதி தேவையில்லை
ஒரு மாநில முதல்வரான ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு என்பதால் வழக்கு தொடர முன்கூட்டிய அனுமதி பெற வேண்டுமா என்று கேட்டுள்ளீர்கள். அதுபோன்ற எந்த அனுமதியையும் மேல்முறையீட்டுக்கு பெற வேண்டியதில்லை. முதல்முறையாக வழக்கு தொடரும்போதுதான் அதுபோன்ற அனுமதி தேவைப்படும். கர்நாடக அரசுக்கு அரசியல்சாசனத்தின்படி, இவ்வழக்கில் மேல்முறையீடு செய்ய அனைத்துவகையான உரிமையும் உள்ளது.
ஆச்சாரியாவே தொடரலாம்
சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும்போது, அரசு தரப்பு சிறப்பு வக்கீலை நியமிக்க, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை கலந்து ஆலோசிக்க வேண்டிய தேவையில்லை. கர்நாடக சட்ட அலுவலர்கள் சட்டம் 1977ன் கீழ், கர்நாடக அரசுக்கு, தனது தரப்பு வழக்கறிஞரை நியமிக்க முழு அதிகாரம் உள்ளது. இவ்வாறு அட்வகேட் ஜெனரல் ரவிவர்மகுமார் திட்டவட்டமாக தனது அறிக்கையில் கூறியுள்ளார். அநேகமாக ஜூன் 1ம் தேதி நடைபெறும் கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் ரவிவர்மகுமார் சிபாரிசு பரிசீலிக்கப்படும் என்று தெரிகிறது.