ஜெ. அப்பீல் வழக்கின் விசாரணை மே 3-க்கு ஒத்திவைப்பு- சசி வக்கீல் வாதம் தொடரும்
டெல்லி: ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை மே 3-ந் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அன்றைய தினமும் சசிகலாவின் வழக்கறிஞர் சேகர் நாப்டே தமது வாதங்களை தொடர உள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் பெஞ்ச் விசாரித்து வருகிறது. கர்நாடகா அரசு, ஜெயலலிதா தரப்பு இறுதிவாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே தமது இறுதிவாதங்களை முன்வைத்து வருகிறார். இன்றும் அவர் தமது வாதங்களை முன்வைத்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை மே 3-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினமும் சசிகலாவின் வழக்கறிஞர் சேகர் நாப்டே தமது வாதங்களை தொடர உள்ளார்.
அவர் வாதத்தை நிறைவு செய்த பின்னர் அனைத்து தரப்பு வாதங்களுக்கும் கர்நாடகா அரசு பதில் வாதங்களை தாக்கல் செய்யும். பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படும்.