ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு: பிப்ரவரி 23க்கு பிறகு இழுத்தடிக்க விடாமல் நடத்த கர்நாடகா திட்டம்
டெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று கர்நாடகா விரும்புகிறது. எனவே, பிப்ரவரி 23ம் தேதி முதல் வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதில் கர்நாடகா முனைப்பு காட்டும் என்று அம்மாநில சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு அப்பீல் மனு, சுப்ரீம் கோர்ட்டின் இரு நீதிபதிகள் பெஞ்ச் முன்னிலையில் விசாரிக்கப்படுகிறது. பிப்ரவரி 2ம் தேதி முதல் இறுதிகட்ட விசாரணை நடைபெறும் என்று கடந்த முறை நடந்த விசாரணையின்போது, நீதிபதிகள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், ஜெயலலிதா தரப்பில் இருந்து நேற்று ஒரு மனு உச்சநீதிமன்றத்தில், தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று அம்மனுவில் கோரப்பட்டது. இதையேற்று, விசாரமஐயை, பிப்ரவரி 23ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
இந்நிலையில், கர்நாடக சட்டத்துறை வட்டாரங்கள் 'ஒன்இந்தியாவிடம்' கூறியதாவது: சொத்துக்குவிப்பு வழக்கை தொடர்ச்சியாக நடத்தி முடிக்கவே கர்நாடக தரப்பு விரும்புகிறது. 23ம் தேதி மீண்டும் வழக்கை ஒத்தி வைக்க கோரிக்கைவிடுக்கப்பட்டால், அதை கர்நாடக தரப்பு எதிர்க்கும்.
மேலும், அருணாச்சல பிரதேசத்தில், குடியரசு தலைவர் ஆட்சியை, அமல்படுத்தியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை விசாரிக்கும், நீதிபதிகளில் ஒருவர், ஜெயலலிதா வழக்கை விசாரிக்கும் நீதிபதி. அருணாச்சல பிரதேச வழக்கு, பிப்ரவரி 1ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
அது அவசரம் சார்ந்த வழக்கு என்பதால், நீதிபதியால், ஜெயலலிதா வழக்கில் கவனம் செலுத்த முடியாது என்று நினைத்தோம். எனவேதான், சொத்துக்குவிப்பு வழக்கை பிப்ரவரி 23ம் தேதிக்கு தள்ளி வைத்தபோது, கர்நாடக தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தாவே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.