ஒரு தப்பை சரி செய்தாலே ஜெயலலிதா விடுதலை ரத்தாகிவிடும்.. சுப்ரீம்கோர்ட் மனுவில் கர்நாடக அரசு கறார்
டெல்லி: ஒரு கூட்டல் கணக்கை சரி செய்தாலே சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்தது செல்லாது என்று அறிவித்துவிடலாம் என்று கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த தனது பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக ஹைகோர்ட்டில் செய்த மேல்முறையீட்டின்போது, தனிக்கோர்ட்டு தீர்ப்பை நீதிபதி குமாரசாமி ரத்து செய்ததுடன், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார்.
இதனை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றது. விசாரணையை ஜனவரி 8ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
நீதிபதி மாற்றம்
இந்தநிலையில், சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்கும் விசாரணை நீதிபதி மாற்றம் செய்யப்பட்டார். நீதிபதி ஆர்.கே அகர்வாலுக்கு பதிலாக அமித்வா ராய் விசாரிப்பார் என்று தெரிவிக்கப்படுள்ளது. மற்றொரு நீதிபதியாக பினாகி சந்திரகோஷ் தொடர்கிறார்.
இறுதி விசாரணை
இந்த விசாரணை கடந்த 8ம் தேதி நீதிபதிகள், பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள், "ஜெயலலிதா உள்ளிட்டோர் சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு, அன்பழகன் ஜெயலலிதா ஆகியோர் பதில் அளிக்க வேண்டும். பிப்ரவரி 2ம் தேதிக்கு முன்பாக பதில் அளிக்க வேண்டும். அதில் விசாரணையின்போது எந்தெந்த அம்சங்களில் சந்தேகம் உள்ளதோ அந்த விஷயங்களை மட்டும் தெரிவித்து, பதில் இருக்க வேண்டும். பிப்ரவரி 2ம் தேதி முதல் இறுதி விசாரணை நடத்தப்படும்" என கூறினர்.
கர்நாடக அரசு தாக்கல்
இதையேற்று மூன்று தரப்பினரும், பதில் மனு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதில் கர்நாடக அரசு தனது பதிலை நேற்று சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. மேல்முறையீட்டு மனு தொடர்பான விசாரணையில் விவாதிக்கப்பட வேண்டிய 16 அம்சங்களை கர்நாடக அரசு குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கணித பிழை
அந்த 16 அம்சங்களில் முக்கியமானது, ஹைகோர்ட் செய்த கணித கூட்டல் பிழை பற்றியாதாகும். ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில், வருவாய்க்கு அதிகமாக ஜெயலலிதா சேர்த்த சொத்தின் மதிப்பு 8.12 சதவீதம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், வருவாய் மற்றும் செலவுகளை சரியாக கூட்டினால், வருவாய்க்கு மீறிய சொத்து மதிப்பு 76.7 சதவீதமாக உயர்ந்துவிடும்.
தீர்ப்பை ரத்து செய்யலாம்
இந்த கூட்டல் பிழையை சரி செய்தாலே, வருவாய்க்கு மிக அதிகமாக ஜெயலலிதா சொத்து குவித்திருப்பது உறுதியாகிவிடும். ஹைகோர்ட் தீர்ப்பை ரத்து செய்ய முடியும் என்று கர்நாடக அரசு தரப்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
10 சதவீதம் உள்ளே
மேலும், ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததை ஒப்புக்கொண்டாலும், கூட்டல் பிழையால் வந்த 8.12 சதவீத கூடுதல் வருவாயை கணக்கில் கொண்டு, அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம் என்று தீர்ப்பளித்துள்ளார்.
பழைய தீர்ப்பு
1977ம் ஆண்டு நடந்த அக்னிஹோத்ரி வழக்கில், வருவாய்க்கு அதிகமாக 10 சதவீதத்திற்குள் சொத்து சேர்த்திருந்தால் அதற்காக தண்டனை தேவையில்லை, கணக்கு வழக்கு விடுபட்டு அவ்வாறு சேர்ந்திருக்கவும் வாய்ப்பு உண்டு என்று வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பை மேற்கோள் காட்டி ஜெயலலிதாவை, ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி விடுதலை செய்துள்ளார்.
ஆயிரமும் கோடிகளும் ஒன்றா?
அக்னிஹோத்ரி வழக்கு சில ஆயிரங்கள் சம்மந்தப்பட்டது. அந்த தீர்ப்பில் 10 சதவீதத்திற்குள் கூடுதல் சொத்து இருந்தால் தப்பில்லை என்று வழங்கிய தீர்ப்பை, கோடிக்கணக்கான மதிப்பு கொண்ட சொத்துக்குவிப்பு வழக்கு ஒன்றில் புகுத்தி பார்ப்பது சரியான முன்னுதாரணம் கிடையாது என்றும் கர்நாடக அரசு தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
ரத்து செய்க
மேலும், கர்நாடக ஹைகோர்ட்டில், கர்நாடக அரசு தரப்பை வாதிடவே நீதிபதி அனுமதிக்காததையும், இறுதிகட்டத்தில், பவானிசிங் நியமனம் செல்லாது என்று சுப்ரீம்கோர்ட் சொன்னபிறகும், கால அவகாசம் தராமல், எழுத்துப்பூர்வமாக மட்டுமே வாதத்தை சமர்ப்பிக்க நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டதையும் குறிப்பிட்டு, அவசரகதியில் வழங்கப்பட்ட அந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் கர்நாடக அரசு தரப்பு கேட்டுள்ளது.
ஆச்சாரியா டீம்
பிப்ரவரி 2ம் தேதிக்கு பிறகு தொடங்க உள்ள மேல்முறையீட்டு மனு விசாரணையின்போது, கர்நாடக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா தலைமையிலான குழு ஆஜராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.