4 தொகுதிகளில் போட்டி.. ஜெயலலிதா மீதான வழக்கை முடித்து வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான, ஒரே நேரத்தில் 4 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான, ஒரே நேரத்தில் 4 சட்டசபை தொகுதியில் போட்டியிட்டது தொடர்பாக நடந்து வந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில், கிருஷ்ணகிரி, புவனகிரி, ஆண்டிப்பட்டி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அப்போது இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
பின்னர், ஒருவர் ஒரே நேரத்தில் இரு தொகுதிகளுக்கு மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் விதிமுறை உள்ளது என்று கூறி குப்புசாமி எம்.பி. உச்ச நீதிமனறத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீண்ட நாட்களாக இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் ஜெயலலிதா இறந்துவிட்டதால், வழக்கு காலாவதியாகிவிட்டது எனக் கூறி நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.