இது இறுதி தீர்ப்பு அல்ல.. இந்த வழக்கு நிச்சயம் உச்ச நீதிமன்றத்திற்கு செல்லும்- ஆச்சார்யா
பெங்களூரு: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் எந்த மாதிரியான தீர்ப்பு வந்தாலும் அது அத்தோடு முடியாது. நிச்சயம் உச்சநீதிமன்றத்திற்கு இந்த வழக்கு செல்லும் என்று ஜெயலலிதா வழக்கில் ஆரம்பத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞராக ஆஜராகி, பின்னர் விலகி, தற்போது மீண்டும் இணைந்துள்ள ஆச்சார்யா கூறியுள்ளார்.
தீர்ப்பு எப்படி வரும் என்று ஊகிக்க முடியாது என்றும் அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்றும் ஆச்சார்யா கூறியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கி் பெங்களூரு தனி நீதிமன்றம் தனக்கு அளித்த 4 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ. 100 கோடி அபராதம் ஆகியவற்றை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளார் ஜெயலலிதா. அதேபோல மற்ற குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் அப்பீல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் நீதிபதி குமாரசாமி முன்பு விசாரிக்கப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதையடுத்து கர்நாடக உயர்நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நகரிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழக, கர்நாடக எல்லையிலும் இரு மாநில போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்தத் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது தொடர்பாக அனைத்து மட்டத்திலும் எதிர்பார்ப்புகள் பலமாக உள்ளன.
இந்த வழக்கில் ஆரம்பத்தில் ஆஜராகி இடையில் விலகி தற்போது மீண்டும் இணைந்துள்ள அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா தீர்ப்பு எப்படி இருக்கலாம் என்பது குறித்துக் கூறுகையில், தீர்ப்பு தேதியன்று ஜெயலலிதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக தேவையில்லை. ஒருவேளை தீர்ப்பில் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தாலும், அதற்கான உத்தரவு விசாரணை நீதிமன்றத்திற்கு செல்லும்.
பின்னர் விசாரணை நீதிமன்றம்தான் ஜெயலலிதா உள்ளிட்டோரை தனது கஸ்டடியில் எடுத்துக்கொள்ளும். அதே சமயம், தீர்ப்பு பாதகமாக வந்தாலும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்து நிவாரணம் தேடிக்கொள்வதற்கான வாய்ப்பு ஜெயலலிதாவுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார் ஆச்சார்யா.
மேலும் இந்த வழக்கின் தீர்ப்பானது இறுதியல்ல. இதில் எப்படி தீர்ப்பு வந்தாலும் மறு தரப்பு நிச்சயம் உச்சநீதிமன்றம் செல்லும் என்பதால், உச்சநீதிமன்றத்தில்தான் இந்த வழக்குக்கு இறுதி தீர்ப்பு கிடைக்கும் என்று சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஜெயலலிதாவுக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால் அவர் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வார். அவருக்கு சாதகமாக வந்தால் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.