ஜெ. அப்பீல்: மோடி ஏன் வாயை மூடி பேசாமல் இருக்கிறார்?.. ஜெயராம் ரமேஷ் கேள்வி
டெல்லி: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அப்பீல் செய்வது தொடர்பான விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் அமைதி காக்கிறார் என்பதை விளக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது பற்றிய முடிவு குறித்து பிரதமர் மோடி ஏன் அமைதியாக இருக்கிறார். மேல்முறையீடு செய்யுமாறு கர்நாடக அரசை ஏன் நிர்பந்திக்கிறார்கள்?
உண்மையில், அசல் மனுதாரர்கள் அனைவரும் பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்கள்தான் என்பதை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன். கர்நாடக அரசை பகடைக்காயாக பயன்படுத்துவதே அவர்கள் நோக்கம்.
இதில் பிரதமர் மோடியின் கருத்து என்ன என்பதை தெரிந்து கொள்ள நான் விரும்புகிறேன். அருண் ஜெட்லியும் இதுபற்றி கருத்தை தெரிவிக்க வேண்டும். உண்மையில், சுப்ரமணியன் சாமி பா.ஜ.க.வின் மூத்த தலைவர். இன்றைய பதவியேற்பு விழாவில் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் இருவரும் பங்கேற்று இருக்கிறார்கள். அப்படி என்றால் இவ்வழக்கில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன?
கர்நாடக அரசு தற்செயலாக சுப்ரீம் கோர்ட்டால் உள்ளே இழுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது கர்நாடக அரசே வழக்கை தொடுத்ததை போல மாயபிம்பம் உருவாக்கப்பட்டு வருகிறது. அது அல்ல உண்மை. நாங்கள் சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்றார் ஜெயராம் ரமேஷ்.