தேர்தல் பிரச்சார மேடை சரிந்து விழுந்து விபத்து: காயம் இன்றி தப்பித்த லாலு
அர்வால்: பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் பேசிக் கொண்டிருந்த மேடை சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் லாலு காயமின்றி தப்பித்தார்.
பீகார் சட்டசபை தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தலில் 57 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் பீகார் மாநிலம் அர்வால் மாவட்டத்தில் உள்ள மதுவன் மைதானத்தில் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் இன்று மக்களிடையே உரையாற்றினார்.
மேடையில் அளவுக்கு அதிகமானோர் இருந்தனர். இதையடுத்து மேடையின் ஒருபுறம் சரிந்தது. அப்போது மேடையில் இருந்த கட்சியினர் கீழே விழுந்தனர். இந்த சம்பவம் நடந்தபோது மேடையின் மறுப்பக்கம் இருந்ததால் லாலு பிரசாத் யாதவ் காயமின்றி தப்பினார்.
லூலு அர்வால் தொகுதியில் தனது கட்சி சார்பில் போட்டியிடும் ரவீந்திர சிங்கிற்கு வாக்கு சேகரிக்க வந்தபோது தான் இந்த சம்பவம் நடைபெற்றது. இந்த விபத்தில் யாருக்கும் பெரிய காயம் எதுவும் படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேடையில் இருந்தவர்களில் பலர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
அதன் பிறகு பேசிய லாலு கூறுகையில்,
என்னைப் போன்ற நல்ல மனிதருக்கு எந்த தீங்கும் நடக்காது. ஆனால் தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்துள்ளது என்றார் காமெடியாக.