ஒருதலை காதல்: பி.எட். மாணவி தலை சிதைத்து, கை துண்டிக்கப்பட்டு கொலை
ராஞ்சி: ஜார்க்கண்டில் 30 வயது பி.எட். மாணவி தலை நசுங்கி, ஒரு கை வெட்டப்பட்ட நிலையில் கல்லூரிக்கு வெளியே பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கார் மாவட்டத்தை சேர்ந்தவர் சோனாலி மர்மு(30). அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.எட். படித்து வந்தார். அவரது கணவர் சித்ரஞ்சன் துடு. சோனாலியை அதே ஊரை சேர்ந்த சுகேன் மண்டல்(35) என்பவர் பள்ளிக் காலத்தில் இருந்து ஒருதலையாக காதலித்து வந்ததுடன் அவரை பின்தொடர்ந்தும் உள்ளார்.
இந்நிலையில் புதன்கிழமை கல்லூரிக்கு வெளியே தலை நசுங்கிய நிலையில் ஒரு கை வெட்டப்பட்டு சோனாலி பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மண்டல் கூர்மையான ஆயுதத்தால் சோனாலியின் தலையில் 20 முறை தாக்கியுள்ளார்.
இந்த கொடூர சம்பவத்தை செய்துவிட்டு அவர் தலைமறைவாகிவிட்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மண்டலை தேடி வருகிறார்கள்.
இது பற்றி சோனாலியின் கணவர் கூறுகையில்,
நான் தான் என் மனைவியை தினமும் பைக்கில் கல்லூரிக்கு அழைத்துச் செல்வேன். மண்டல் எங்கள் திருமணத்தின்போது எங்களை மிரட்டினார். நான் சோனாலியின் செல்போன் எண்ணை மாற்றினேன். அப்படியும் அந்த ஆள்விடவில்லை. அவர் தண்டிக்கப்படுவார் என்று நம்புகிறேன் என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கேரளாவில் 30 வயது சட்டக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.