ஜியாகான் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்.. காதலர் சூரஜ் நம்பிக்கை
மும்பை: பாலிவுட் நடிகை ஜியாகான் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அர்த்தத்தில் இங்கிலாந்து தடயவியல் நிபுணர்கள் தாக்கல் செய்துள்ள அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இது பணம் பெற்று ஆய்வு செய்யும் தனியார் நிறுவனத்தின் முடிவு தான். எனவே, இது உண்மையாகத் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என சந்தேகம் கிளப்பியுள்ளார் ஜியா கானின் காதலரும், நடிகருமான சூரஜ் பஞ்சோலி.
நிஷப்த், இந்தி கஜினி உள்ளிட்ட இந்திப் படங்களில் நடித்தவர் ஜியா கான். 2007ம் ஆண்டு அமிதாப் ஜோடியாக அறிமுகமான இவர், கடந்த 2013ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்தி நடிகர் ஆதித்ய பஞ்சோலியின் மகன் சூரஜ் பஞ்சோலியை காதலித்ததாகவும், காதலருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், ஜியாவின் மரணம் தற்கொலை அல்ல கொலை என்று அவரது தாய் ராபியா மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததுடன் இதை சிபிஐ விசாரிக்க கோரிக்கை விடுத்தார்.
அதன் தொடர்ச்சியாக ஜியா கானை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலரும், நடிகருமான சூரஜ் பஞ்சோலி மீது குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் கைது செய்யப்பட்ட மறு மாதமே அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.
ஜியா கான் வழக்கை விசாரித்த சிபிஐ இது ராபியா கூறுவது போன்று கொலை அல்ல தற்கொலை தான் என்று கடந்த மாதம் மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
சிபிஐ அறிக்கை தாக்கல் செய்த பிறகு ராபியா இங்கிலாந்தை சேர்ந்த பெய்ன் ஜேம்ஸ் என்ற தடயவியல் நிபுணரை அணுகி விசாரிக்குமாறு கூறினார். அவர் ஜியாவின் பிரேத பரிசோதனை அறிக்கை, ஜியாவின் சடலத்தின் புகைப்படங்கள், சிசிடிவி வீடியோக்கள், ஜியாவின் அறையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்தார். அதன் தொடர்ச்சியாக தங்களது அறிக்கையை பெய்ன் அளித்துள்ளார்.
அதில் ஜியாகான் பலமாக தாக்கப்பட்டு இருக்கிறார் என்றும் அதற்கான காயங்கள் உடலில் இருப்பதாகவும் கூறி உள்ளனர். இதனால் ஜியாகான் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தகவல் பரவி உள்ளது. இதை தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சூரஜ் பஞ்சோலி மற்றும் அவரது தந்தை ஆதித்யா, "இந்த ஆய்வை மேற்கொண்ட தடயவியல் நிறுவனம் பணம் பெற்றுக் கொண்டு செயல்படும் தனியாருக்குச் சொந்தமானது. எனவே அது ஒருபட்சமான அறிக்கையை அளித்திருக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே, ஜியாவின் மரணம் குறித்து ஆய்வு செய்த பல்வேறு நிறுவனங்கள் அது தற்கொலை தான் என உறுதிபடத் தெரிவித்துள்ளது. உண்மை என்ன என்பதை அறிய நானும் ஆவலாகத் தான் உள்ளேன். ஏனென்றால் என் காதலியை இழந்து நானும் வேதனையில் தான் உள்ளேன்" எனத் தெரிவித்துள்ளனர்.