தீவிரவாத ஆதரவு மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்கு போடலாமா, வேண்டாமா? இக்கட்டில் போலீஸ்
டெல்லி: ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக சில மாணவர்கள், தீவிரவாதி அப்சல் குருவிற்கு ஆதரவாக முழக்கம் எழுப்பிய விவகாரத்தில், தேச துரோக வழக்கை பாய்ச்சுவதா என்பதில் போலீசாருக்கும், உள்துறை அமைச்சகத்திற்கும் குழப்பம் உள்ளது.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தீவிரவாதி அப்சல் குருவிற்கு ஆதரவாக பிரச்சாரம் நடப்பதாகவும், இதற்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்க தலைவர் ஹபீஸ் சையது தூண்டுதலாக இருப்பதாகவும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், கூறியுள்ளார்.
இருப்பினும், இக்குற்றச்சாட்டின் பேரில் மாணவர்கள் மீது தேசத்துரோக (sedition) வழக்கு பதிவு செய்ய போலீசார் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
காவல்துறைக்கு சவால்
உளவுத்துறை அளித்த தகவலின்பேரில்தான் ராஜ்நாத்சிங் இவ்வாறு கூறியிருப்பினும், கோர்ட்டில் சமர்ப்பிக்கும் அளவுக்கு வலுவான ஆதாரத்தை திரட்டாமல் தேசத்துரோக வழக்கை பதிவு செய்வது போலீசாருக்கு பெரும் சவாலான காரியமாக உள்ளது.
ஆபத்தானது
ஏனெனில், தேசத்துரோக வழக்கு என்பது இருபுறமும் கூர்மையுள்ள கத்தி. ஆதாரமில்லாமல் அதுபோன்ற வழக்குகளை பதிவு செய்து, பிற்காலத்தில் கோர்ட் அவர்களை விடுதலை செய்யும்பட்சத்தில், இந்தியாவுக்கு எதிரான மனநிலையை ஒரு குறிப்பிட்ட பிரிவினர் நடுவே அது ஏற்படுத்தும். வழக்கு பதியாமல் விட்டாலோ, பெரும்பான்மை சமூகம், அரசை விமர்சனம் செய்யவும் வாய்ப்புள்ளது.
தீவிரவாதிகளுக்கு வசதி
இதுபோன்ற சூழ்நிலைகளைதான் தீவிரவாத குழுக்கள் விரும்புகின்றன. 2014ம் ஆண்டு மீரட்டில் காஷ்மீரை சேர்ந்த 67 மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டபோது, இதே ஹபீஸ் சையது, அந்த மாணவர்களுக்கு தனது செலவில் ஸ்காலர்ஷிப் தருவதாக கூறினார்.
திட்டம்
தீவிரவாதிகளுக்கு ஆதரவானவர்களை இந்தியாவிற்குள்ளேயே உருவாக்குவது தீவிரவாதிகளின் இலக்கு. அப்போதுதான், தாக்குதல் திட்டங்களுக்கு அவர்கள் உடந்தையாக இருப்பார்கள் என்பது தீவிரவாதிகள் திட்டம்.
ஆதாரம் தேவை
இதை கருத்தில் கொண்டு, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட கருத்துகளை வைத்து, மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்கு போட்டுவிட கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. தக்க ஆதாரங்களை தேடி வருகிறது காவல்துறை. அப்பல்கலைக்கழக, மாணவர் அமைப்பின் தலைவர் கண்ஹையா குமார் மீது மட்டும் தற்போது தேசத் துரோக குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.