முத்துக்கிருஷ்ணன் மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் - தந்தை வலியுறுத்தல்
மகனின் மரணத்தில் மர்மம் உள்ளது நீதி விசாரணை வேண்டும் என்று டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் தந்தை வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி : டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சேலத்தைச் சேர்ந்த முத்துக் கிருஷ்ணன் மர்மம் உள்ளதாக பெற்றோர்களும், உறவினர்களும் கூறியுள்ளனர். தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு முத்துக்கிருஷ்ணன் கோழையல்ல என்றும் நீதி விசாரணை வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில் பயின்று வந்த சேலத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற மாணவர் நேற்றிரவு தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
டெல்லியில் உள்ள முனிர்கா விஹார் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்த முத்துக்கிருஷ்ணன் தனது நண்பர்களிடம் உறங்க செல்வதாகக் கூறியுள்ளார். பின்னர் அவரது நண்பர்கள் வெகுநேரமாக அறையை தட்டியும் திறக்காததால், போலீசில் தகவல் தெரிவித்துள்ளனர்.
தூக்கில் தொங்கிய மாணவர்
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்த போது, முத்துக்கிருஷ்ணன் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து முத்துக்கிருஷ்ணன் தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமத்துவமில்லை
தற்கொலைக்கு முன்னர் முத்துக்கிருஷ்ணன், தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமத்துவமில்லை என்று கடந்த 10ஆம் தேதி தெரிவித்திருந்தார். முகநூலில் ரஜினி கிரிஷ் என்றுதான் நண்பர்களுக்கு பரிட்சயமாக இருக்கிறார் முத்துக்கிருஷ்ணன்.
நீதி விசாரணை வேண்டும்
முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை என்று அவரது தந்தை ஜீவானந்தம் தெரிவித்துள்ளார். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசியபோது தேர்வை நன்றாக எழுதியிருப்பதாக முத்துக்கிருஷ்ணன் தெரிவித்திருந்ததாக ஜீவானந்தம் கூறினார். மகனின் மரணத்திற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தங்கை கதறல்
அண்ணன் மீது அதிக பாசம் வைத்துள்ள அவரது தங்கையோ, எங்க அண்ணன் மெரிட்ல பாஸ் பண்ணித்தான் டெல்லிக்கு படிக்க போனார். ஆனால் இப்படி ஒரு முடிவு எடுக்க வாய்ப்பே இல்லை. அடுத்த வாரம் ஊருக்கு வரப்போறதா போன் பண்ணியிருந்தார். இப்படி தற்கொலை பண்ணிட்டதா சொல்றாங்க. ஆனா அவர் அந்த முடிவு எடுக்கிற அளவுக்கு கோழையில்லை என்கிறார். இது எங்களுக்கு அதிர்ச்சியா இருக்கு என்றும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
நீதி கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை
முத்துகிருஷ்ணன் மரணத்திற்கு நீதி கேட்டு சேலம் 5 ரோடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாணவரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு உயர்கல்வி கற்கச் செல்லும் மாணவர்களின் தொடர் மரணம் பற்றி தமிழக அரசியல் தலைவர்கள் மவுனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர்கள், நீதி கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.