டெல்லி ஜே.என்.யூ.வில் அன்புமணிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்
டெல்லி: டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக (ஜே.என்.யூ) கருத்தரங்கில் பாமக இளைஞரணித் தலைவரான அன்புமணி ராமதாஸ் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜே.என்.யூ.வில் சமூக நீதி தொடர்பான கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கில் அன்புமணி ராமதாஸும் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தருமபுரி சாதி கலவரத்துக்குக் காரணமான அன்புமணி ராமதாஸ் ஜே.என்.யூ. பல்கலைக் கழக வளாகத்துக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து நேற்று முதல் சமூக வலைதளங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. சிலர் அன்புமணியின் உருவபொம்மையை எரிக்கப் போவதாகவும் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் கருத்தரங்கத்துக்கு இன்று வருகை தந்த அன்புமணிக்கு எதிராக ஜே.என்.யூ. மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.