ஜே.என்.யூ திரும்பினார் தலைமறைவு மாணவர் உமர் காலித்.. கேம்பசுக்கு வெளியே போலீஸ் வெய்ட்டிங்
டெல்லி: ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ) வளாகத்தில் தீவிரவாதி அப்சல் குருவிற்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவர்கள் மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு திரும்பியுள்ளனர். அப்சல் குரு ஆதரவு நிகழ்ச்சிக்கு மூளையாக செயல்பட்ட உமர் காலித், தான் ஒரு முஸ்லிம் என்பதால் தன்னை தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளவராக மீடியாக்கள் சித்தரிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 9ம் தேதி ஜே.என்.யூ வளாகத்தில், நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி, அப்சல் குருவிற்கு ஆதரவாக உமர் காலித் என்பவர் தலைமையில் ஜனநாயக மாணவர் சங்கத்தினர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். பல்கலை. நிர்வாகம் மறுத்த நிலையிலும், அந்த நிகழ்ச்சியை அவர்கள் நடத்தியுள்ளனர்.
நிகழ்ச்சி நடத்தப்பட்டபோது, அப்சல் குருவிற்கு ஆதரவாகவும், பாகிஸ்தான் வாழ்க எனவும், இந்தியாவுக்கு எதிராகவும் சில மாணவர்கள் கோஷமிட்டுள்ளனர்.
கன்யா குமார் கைது
உமர் காலித், அநிர்பன் பட்டாச்சாரியா, அசுதோஷ்குமார், ஆனந்த் பிரகாஷ் நாராயண், ரியாசுல் ஹக், ராமா நாகா ஆகியோர் இவ்வாறு, கோஷமிட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாணவர் சங்க தலைவர் கன்யா குமார், தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.
லுக்-அவுட் நோட்டீஸ்
உமர் காலித் உள்ளிட்டோர் தலைமறைவாகிவிட்ட நிலையில், வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முடியாதபடி லுக்-அவுட் சுற்றரிக்கையை பிறப்பித்தது காவல்துறை. 5 மாநிலங்களில் அவர்களை போலீசார் தேடி வந்தனர். உமர் காலித் செல்போனில் இருந்து பாகிஸ்தான், வங்கதேசத்திற்கு 800 தொலைபேசி அழைப்புகள் பறந்ததாக சில மீடியாக்கள் செய்தி வெளியிட்டன.
|
கேம்பசுக்கு வெளியே போலீஸ்
இந்நிலையில், உமர் காலித் (படத்தில் வட்டம் போடப்பட்டுள்ளவர்) உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட மாணவர்கள் அனைவரும் நேற்று திடீரென ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்திற்கு வந்தனர். அங்கு திரண்டிருந்த மாணவர்கள் சிலர் மத்தியில் அவர்கள் உரையாற்றினர். தகவல் அறிந்து காவல்துறை பல்கலைக்கழகத்திற்கு வந்தது. இருப்பினும், கேம்பசுக்கு வெளியே போலீசார் நின்றனரே தவிர உள்ளே சென்று கைது நடவடிக்கையில் இறங்கவில்லை.
காத்திருக்கும் காவல்துறை
ஜே.என்.யூ நிர்வாகம் அனுமதியளிக்காமல் கேம்பசுக்குள் போலீசார் போகமுடியாது என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மாணவர்கள் அவர்களாகவே சரணடைவார்கள் என்ற எதிர்பார்ப்பில் காவல்துறை இன்னமும் காத்துக்கொண்டுள்ளது.
|
முஸ்லிம் என்பதால் டார்கெட்
இதனிடையே உமர் காலித் பேசுகையில், கடந்த 7 வருடங்களாக ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற காலத்தில் ஒருநாள் கூட நான் முஸ்லிம் என உணரவில்லை. ஆனால், கடந்த 10 நாட்களாக என்னை தீவிரவாதிகளோடு சம்மந்தப்படுத்தி மீடியாக்கள் செய்தி வெளியிட ஆரம்பித்த பிறகுதான், முஸ்லிம் என உணரத்தொடங்கியுள்ளேன்.
அச்சத்தால் தலைமறைவு
நான் தீவிரவாதி கிடையாது. ஜே.என்.யூ மாணவன் மட்டுமே. பொதுவெளிக்கு வந்தால் தாக்கப்படுவேன் என்ற அச்சத்தால்தான் இத்தனை நாட்களாக வெளியே வரவில்லை. ஊடகங்கள், சமூக ஊடகங்களில் என்ன மாதிரி விவாதங்கள் நடக்கிறது என்பதை பார்த்த பிறகுதான் வெளியே வந்துள்ளோம் என்றார்.
கைதாகலாம்
இதனிடையே, உமர் காலித்தின் நண்பர், ராமா நாகா கூறுகையில், அப்சல் குருவிற்கு ஆதரவாக கோஷமிட்டதாக வெளியான தகவலை மறுத்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக தாங்கள் செயல்படவில்லை, சரணடையப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அப்சல் குரு ஆதரவு கோஷமிட்ட மாணவர்களை கைது செய்ய நாடு முழுவதும் நெருக்கடி அதிகரித்துள்ளதால், அவர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.