எல்லையில் "முறைக்கும்" சீனாவுடன் கூட்டு ராணுவப் பயிற்சி... தயாராகும் இந்திய வீரர்கள்
டெல்லி: இந்தியா, சீனா இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சி அக்டோபர் 12ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடைபெறவுள்ளது. சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள குன்மிங் ராணுவ அகாடமியில் இந்தப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் பயிற்சி இது. இது ஐந்தாவது பயிற்சியாகும். 2007ம் ஆண்டு முதல் கூட்டுப் பயற்சி நடைபெற்றது.
கடந்த ஆண்டு நான்காவது கூட்டு ராணுவப் பயிற்சி புனே நகரில் உள்ள ஆந்த் ராணுவ முகாமில் நடைபெற்றது. அதற்கு முன்பு 2013ல் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள மியாவோ எர்காங் மையத்தில் நடைபெற்றது.
கூட்டு ராணுவப் பயிற்சி
இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே நல்லிணக்கவும், நட்புறவும், நிலவுவதை உறுதி செய்யவே இந்த கூட்டு ராணுவப் பயிற்சியை இரு நாடுகளும் இணைந்து நடத்தி வருகின்றன.
பரஸ்பரம் நட்புறவு
இரு நாட்டு ராணுவமும் கூட்டு ராணுவப் பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டு இரு நாட்டு ராணுவமும் அரவணைத்து முன்னேற்றப் பாதையில் செல்வதை உறுதி செய்யும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டு வருகின்றன.
12 நாள் பயிற்சி
இந்தப் பயிற்சி குறித்து ராணுவச் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் இந்த கூட்டு ராணுவப் பயிற்சி உதவிகரமாக இருக்கும். மேலும் பேரிடர் மீட்பு நடவடிக்கைகள், மனிதாபிமான உதவிகள் போன்றவற்றுக்கும் இரு நாட்டு ராணுவத்தினர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கும் இது உதவும். 12 நாட்களுக்கு இப்பயிற்சி நடைபெறும்.
தகவல் பரிமாற்றம்
இந்தப் பயிற்சியின்போது இரு நாட்டு கமாண்டர்கள், அதிகாரிகள், ஒருவருக்கொருவர் தகவல்களைப் பரிமாறிக் கொள்வது, இணைந்து செயல்படுவது போன்றவற்றில் ஈடுபடுவது குறித்து பயிற்சி எடுப்பர்.
பரஸ்பர நட்புறவு
இந்தப் பயிற்சியின்போது இரு தரப்பு நிர்வாக அமைப்புகள் குறித்த அறிவு புகட்டப்படும். மேலும் ஆயுதங்கள், சாதனங்கள், டெக்னிக்கல் டிரில்கள் குறித்த பயிற்சியும் இடம் பெறும்.
மூத்த அதிகாரிகள்
பயிற்சியின் நிறைவாக நடைபெறும் ஒத்திகை நிகழ்ச்சியை இரு நாட்டு மூத்த ராணுவ அதிகாரிகளும், கண்காணிப்பாளர்களும் பார்வையிடுவர். இந்த ஒத்திகையின்போது தீவிரவாதிகளுக்கு எதிரான ஒத்திகை தேடுதல் வேட்டையில் இரு நாட்டு ராணுவத்தினரும் இணைந்து செயல்படுவர்.