முலாயம் கட்சி எம்.எல்.ஏ. பற்றி ஃபேஸ்புக்கில் எழுதிய பத்திரிக்கையாளர் எரித்துக் கொலை
லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.வுக்கு எதிராக ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த பத்திரிக்கையாளர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாஜஹான்பூரைச் சேர்ந்தவர் ஜகேந்திர சிங். அவர் ஆளும் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த அந்த பகுதி எம்.எல்.ஏ. ராம் மூர்த்தி பற்றி ஃபேஸ்புக்கில் தொடர்ந்து எழுதி வந்துள்ளார். ராம் மூர்த்தி சட்டவிரோதமாக சுரங்கத் தொழில் செய்வது, நிலத்தை அபகரிப்பது உள்ளிட்டவை பற்றி அவர் ஃபேஸ்புக்கில் எழுதியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ராம் மூர்த்தி ஜகேந்திரா மீது போலீசில் பொய் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரின் போலீசார் ஜகேந்திராவை கைது செய்ய அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு போலீஸ் அதிகாரி ஒருவர் தான் ஜகேந்திரா மீது தீ வைத்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
போலீசாரோ தாங்கள் கைது செய்ய சென்ற இடத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஜகேந்திரா மரணம் அடைந்தார்.
ஆளும் கட்சி எம்.எல்.ஏ. தான் போலீசாரை ஏவிவிட்டு ஜகேந்திராவை உயிருடன் எரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.