ஜெ., அப்பீல் வழக்கில் மே 11ல் தீர்ப்பு? ஹோட்டல் ரூம்கள் நிரம்புகின்றன, மீடியாக்கள் குவிகின்றன!
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கர்நாடக ஹைகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள அப்பீல் மனு மீதான தீர்ப்பு வரும் 11ம் தேதிவெளியாக உள்ளதாக கர்நாடக ஹைகோர்ட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சுமார் பதினெட்டு வருடங்களாக நடைபெற்றது. முதலில் தமிழகத்திலும், அதன்பிறகு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திலும் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு தண்டனை
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய நால்வரும் இவ்வழக்கில் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் ஜெயலலிதாவுக்கு நான்காண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. மற்றமூவருக்கும், 4 ஆண்டு சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன்
இதைத் தொடர்ந்து உடனடியாக ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டார். உயர்நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்ததை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார் ஜெயலலிதா. அக்டோபர் 17ம்தேதி, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் ஜாமீன் கிடைத்தது. இதன்பிறகு உச்சநீதிமன்றம் மே 12ம் தேதி வரைக்கும் ஜாமீனை நீட்டித்துள்ளது.
தீர்ப்பு ஒத்திவைப்பு
இந்நிலையில், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளும் ஹைகோர்ட்டில் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தலைமையிலான சிறப்பு அமர்வு விசாரித்து வந்தது. இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த மார்ச் 11ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து நீதிபதி குமாரசாமி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
அன்பழகன் மனு
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜரான பவானி சிங் நியமனத்தை எதிர்த்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு பரிந்துரை செய்தது. மேலும், ஜெயலலிதா மேல் முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு மே 12ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.
பவானிசிங் நியமனம் செல்லாது
பவானிசிங் நியமனம் பற்றி விசாரித்த 3 நீதிபதிகள் பெஞ்ச் ஏப்ரல் 27ம் தேதி தீர்ப்பு வழங்கியது. பவானி சிங்கின் நியமனம் செல்லாது என தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு எழுதும்போது பவானி சிங் வாதத்தை கருத்தில் கொள்ளக்கூடாது. மாறாக திமுக தரப்பு, கர்நாடக அரசு தரப்பின் எழுத்துப்பூர்வ வாதத்தை கருத்தில் கொண்டு தீர்ப்பு எழுத வேண்டும் என உத்தரவிட்டது. எனவே திமுக தரப்பு மற்றும் கர்நாடக அரசு தரப்பு தங்கள் வாதங்களை சமர்ப்பித்தனர்.
வாட்ஸ்அப்பில் வதந்திகள்
இந்த வாதங்களை பரிசீலித்து, குமாரசாமி எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வழங்க அதிகாரம் உள்ளது. ஆனால், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக, ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு தேதி பற்றி வாட்ஸ்அப்பில் வதந்தி பரவிவருகிறது. கடந்த நான்காம் தேதி தீர்ப்பு தேதி வெளியாக உள்ளதாக மிக வேகமாக வதந்திங்கள் பரவின. ஆனால், அது வதந்தியாகவே கடந்து சென்றது.
|
மே 11ல் தீர்ப்பாம்
இந்நிலையில் வரும் 11ம் தேதி, திங்கள்கிழமையன்று, ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதாக கர்நாடக ஹைகோர்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வக்கீல்கள் வட்டாரத்திலும், நீதிமன்ற செய்திகளை கையாளும் நிருபர்கள் மத்தியிலும், இந்த பேச்சு பலமாக அடிபடுகிறது. இதற்கு வலு சேர்ப்பது போல, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமியும், மே 11ம் தேதி ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வர உள்ளதாக திட்டவட்டமாக சொல்லி டிவிட் செய்துள்ளார். இவருக்கும் கர்நாடக ஹைகோர்ட் வட்டாரத்தில் நல்ல பழக்கம் உள்ளதால், அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏறிக்கிடக்கிறது.
ஹோட்டல் அறைகள் நிரம்புகின்றன
மே 11ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என்ற தகவலால், அதிமுக நிர்வாகிகள் பலரும் இப்போதே பெங்களூருவில் உள்ள ஹோட்டல்களில் அறைகளை புக் செய்ய ஆரம்பித்துள்ளனர். 11ம் தேதி தீர்ப்பு வெளியாகாவிட்டால், 12ம் தேதியாவது தீர்ப்பு வந்தாக வாய்ப்பு அதிகம் என்பதால், இரு நாட்களுக்குமாக சேர்த்து ஹோட்டல் அறைகள் புக் செய்யப்பட்டு வருவதாக பெங்களூரு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊடகங்கள் தயார்
இதனிடையே, தீர்ப்பு செய்தியை கவர் செய்வதற்காக, நாடு முழுவதிலுமுள்ள முக்கிய ஊடகங்கள் பெங்களூருவில் குவிய உள்ளன. ஒவ்வொரு ஊடகத்திலுமுள்ள மூத்த நிருபர்கள், அரசியல் நிருபர்கள், கோர்ட் பீட் பார்க்கும் நிருபர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். விடுமுறை எடுக்க வேண்டாம் என்று அந்த நிருபர்களுக்கு ஊடகங்களின் தலைமைகள் அறிவுறுத்தி வைத்துள்ளன.