மல்லையாவை ஆஜர்படுத்தினால்தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு... சுப்ரீம் கோர்ட் அதிரடி!
விஜய்மல்லையாவை ஆஜர்படுத்தினால்தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: விஜய்மல்லையாவை ஆஜர்படுத்தினால்தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் 2018ம் ஆண்டு ஜனவரிக்குள் விஜய் மல்லையாவை ஆஜர்படுத்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்த தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் வசித்து வருகிறார். பல முறை அவருக்கு சம்மன் அனுப்பியும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதைத்தொடர்ந்து அவர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், மல்லையாவை நாடு கடத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு துவக்கியுள்ளது.
தீர்ப்பு வழங்க முடியாது
இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மல்லையா இல்லாமல் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
நாடுகடத்தல் நடவடிக்கை
அவர் இல்லாமல் வழக்கு விசாரணை நடத்த முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர். இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் கோர்ட்டில் நடந்து வருகிறது என்றார்.
தண்டனை விவரம் ஒத்திவைப்பு
இந்த வழக்கு டிசம்பர் 4க்குள் நிறைவடையும் வாய்ப்பு உள்ளதாக கூறினார். கடனைத் திரும்ப செலுத்தாத வழக்கில் விஜய் மல்லையா இல்லாமல் தீர்ப்பளிக்க முடியாது என்ற உச்சநீதிமன்றம் விஜய் மல்லையாவிற்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விவரத்தையும் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
மத்திய அரசுக்கு உத்தரவு
விஜய் மல்லையாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நாளில் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்றும் உச்சநீதமன்றம் தெரிவித்துள்ளது. 2018ம் ஆண்டு ஜனவரிக்குள் விஜய் மல்லையாவை ஆஜர்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.