சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவியேற்றார் பானுமதி... தமிழகத்தைச் சேர்ந்த முதல் பெண் நீதிபதி!
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் முதல் தமிழ்ப் பெண் நீதிபதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பானுமதி. இன்று அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.
அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவர் தவிர மேலும் 3 நீதிபதிகளும் இன்று உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த பெண் நீதிபதி ஒருவர் உச்சநீதிமன்ற நீதிபதியாவது இதுவே முதல் முறை என்பதால் பானுமதிக்குத் தனிப் பெருமையும் கிடைத்துள்ளது. இதுவரை ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வந்தார் பானுமதி.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்புகள்
தமிழகத்தில் நீதிபதி பானுமதி பணியாற்றிய காலத்தில் பல வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்புகளை அளித்து அனைவரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் நீதிபதி பானுமதி.
தர்மபுரி
தர்மபுரி மாவட்டம் அரூர்தான் நீதிபதி பானுமதியின் சொந்த ஊராகும். 33 வயதில் மாவட்ட நீதிபதியாக சட்டப் பணியைத் தொடங்கியவர்.
பிரேமானந்தா வழக்கில்
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரேமானந்தா வழக்கில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியவர் நீதிபதி பானுமதி. அப்போது அவர் திருச்சி நீதிபதியாக இருந்தார். இந்த வழக்கில் நீதிபதி பானுமதியின் பெயர் பிரபலமானது.
2003 முதல்
கடந்த 2003ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தார். 2013 நவம்பர் 12ம் தேதி ஜார்க்கண்ட் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார்.
7 வருட காலம்
உச்சநீதிமன்ற நீதிபதியாக இவர் 7 வருட காலம் பணியாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
பானுமதி தவிர நீதிபதிகள் அபய் மனோகர் சப்ரே, பிரபுல்ல சந்திர பந்த், உதய் உமேஷ் லலித் ஆகியோரும் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதன் மூலம் உச்சநீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதிகள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.